Thursday 18 September 2014

வாத்தியாரும் நானும்... பள்ளிப்பிராயம்



                கழுதை ஏருக்கு ஒத்து வந்தாலும் வரும் காவனூரான் ஒத்து வரமாட்டான்’ - நான் பிறந்து, உண்டு வளர்ந்த ஊர் மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சீத்துக்கழிப்பா அசலூர்காரவங்கக்கிட்ட வாய்ச்செலவு இன்னிக்கு நிலைச்சி நிக்குது.  இத்தனைக்கும் ஊருக்குள்ள தெக்கால இருக்கிற எழுபதுகளுக்குள்ள அடங்குகிற பறையர் குடிகளும் மீதி இருக்கிய நாலஞ்சி தெருவுக்குள்ள நாப்பது முன்னப்பின்ன வெள்ளாளக்குடிகளும், மூணுசாணார் உறவுமுறைக் குடிகளும் ஊர்க்காவலுக்குன்னே பண்ணை மாகாணம் குடியேச்சி வச்ச ரெண்டு கள்ளர் குடிகளும், எண்ணெச் செட்டியார், நாய்க்கர்ன்னு தலைக்கு ஒரு குடிகளும் கிராமத் தொழிலாளிங்க குடிங்களுமா சேந்து ஒண்ணாடி முன்னாடியா கிடக்குங்க.
                எல்லாக்குடிகளும் திங்கிறதுக்கும் உங்கிறதுக்கும் சின்னதும் பெரிசுமா குடிசை கட்டிக்க பண்ணை மாகாணம் கை காட்டிவிட்டிருக்கும்.  மொத்தத்தில் பண்ணைக்கு எல்லாருமே ஒண்டுக்குடிகதான்.  மொத்தமா பட்டா அடங்கல வச்சிக்கிட்டு இருந்துச்சு.  எல்லாத்தையும் ஏகபோகமா அனுபவிச்சிக்கன்னு ஒருசிவன்கோயிலும் கோயில் குளக்கரையில் இருந்த குருக்கள் இருக்கும் ஒத்தக்கட்டு ஓட்டுவீடும் ஊருக்குள்ள பிரபலம்.  பண்ணைக்கார பெருங்குடி நாலுகட்டு வீட்டுல, பெரிய காங்கிரஸ் கொடியப் பறக்க விட்டுருக்கும்.  பாக்கிறதுக்கு பண்ணையோட கட்டுமானத்தில் தான் தெரியும்.  பறையர் தெருவுக்குள்ள கம்யூனிஸ்ட் காரவங்க வந்து போயிக்கிட்டு பண்ணைக்குக் கீழறுப்பு வேலையைச் செய்யும்போதே மத்த குடிகள் தெருவில் திராவிட கழகத்தோட கொடியை தெம்பா பறக்கவிட்டது.  அண்டை அயலாருங்களும் இல்ல.
                டீக்கடை ராஜாங்கம், மாங்காகணேசன், தங்கையன் இவங்க போதாதா?  இவங்களுக்கு பண்ணைக்கிட்ட கீழ்முள்ளு வைக்கன்னே ரெண்டுமூணு குடிக அப்பஅப்ப முளைச்சிக்கும்.  எந்த புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னு கண்டுக்க முடியாமத்தான் இருங்குங்க.  தேர்தல் வந்தா ஓட்டுப்போடுற காலத்தில் பண்ணைமாகாணம் கிழிக்கிற கோட்டைத் தாண்டித்தான் ஓட்டுவிழும்.  அதைக் கண்டு காணாதுமா பண்ணை இருந்துடும்.  அதுக்கு எப்படியோ கலகம் வந்துடக் கூடாது.  நம்ம குடிபடைங்க நம்மக்கிட்ட ஒண்டுக்குடியாக இருந்தா போதுங்கிற மனசு.  இதைக் குத்திக்காட்டத்தான் அயலூர் பண்ணை மாகாணங்க கிளப்பிவிட்ட வாய்ச்செலவு அது.
                திருவாரூக்கு மேலப்பக்கம் எட்டு மைல் தொலைவில் காட்டாத்துக் கரையில் அறுவது வேலி நஞ்சைபுஞ்சையோட கிடக்கிறதுதான் காவனூர்.  நடுத்தெருவில் ஒண்டுக்குடியா இருந்த கமலாம்பாளுக்கும் சுப்பிரமணிக்கும் அஞ்சாவதா கரிக்கட்டைக்குக் கால் முளைச்சாப்போல பொறந்திருந்தேன்.  அஞ்சாவதா ஆம்புளப்புள்ள பொறந்திருக்கான் பாரு அரசாளுவான்ன்னு பெரிய கனவை மனசுல வைச்சிக்கிட்டு என்னைப் பெத்த அம்மா பீத்திக்கிட்டு சொல்லும்போதுஉனக்கெல்லாம் அதுக்கு பொசுப்பு இல்லடிஅடுத்த குடிசைக்கார பட்டக்கா சொல்லறப்ப அம்மா மூஞ்சி சூம்பித்தான் போயிடும்.
                இருந்தாலும், ‘பொச்சரிப்பு புடுச்சவளுங்க இப்புடித் தான் எடக்குத்து குத்துவாளுங்கன்னு சொல்லிக்கிட்டு என்னை தன் கைக்குள்ளே பொத்திப் பொத்தித்தான் வளர்த்துச்சி.  எனக்குத்தான் கொடுப்பன இல்ல.  அம்மாவுக்கு என்னா நோவுன்னு தெரியாமலேயே ஒரு நாள் அம்மாவை தெக்கே கொண்டுபோய் வச்சிட்டாங்க.  அந்தக் கூலிக்காரவங்களுக்கு சூத்துவச்சி குத்த நேரம் ஏது?  ரெக்கையைக் கட்டிக்கிட்டு நின்னாத்தான் அரைவயிறாவது ரொம்பும்.  இந்த வல்லளவில சவளைதட்டி ஒடுக்கு விழுந்து கிடக்கும் புள்ளைங்களை அப்பன்காரர் கைப்பத்தா பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிக் கிட்டுப்போய் சேத்துவிட்டு பணிக்குப் பண்ணிவிட நேரம் ஏது?
                அம்மாவுக்கு வீடு போபோன்னும் காடு வாவான்னு சொல்லிக்கிட்டு இருக்கிறத புரிஞ்சிக்கிறதுக்குக்கூட திராணி இல்ல.  படிப்புச் சொல்லித் தாறேன்னு புள்ளைங்களைத் தேடிக்கிட்டு திரியிற வாத்தியாரோடஇவனையாச்சும் அனுப்பி வையிங்களேன்அம்மா நச்சரிப்ப தாங்க முடியாம ஒருநாள், ‘வாத்தியாரே! பயலை அழைச்சிக்கிட்டுப்போய் சேத்துக்கங்கைய்யான்னு அப்பா ஒரு காலைப்பொழுதுல பிச்சமுத்து வாத்தியாருகிட்ட என்னைக் காட்டியுட்டார்.  நான் அவரு கையைக் கெட்டியாப் புடுச்சிக்கிட்டேன்.
                உன் பேரு என்னான்னு கேட்டார்.  எனக்கு சந்தோசம் தாங்க முடியல.  ஏன்னா என்னோட பேரைக் கேட்டது வாத்தியாருதான்.  ஊருக்குள்ள கரியன் மொவன் பொரிச்ச முறுக்குன்னு  கூப்புடுவாங்க.  நான் வாத்தியாருக்கிட்டகலியபெருமான்னு சொன்னேன்.  பிச்சைமுத்து வாத்தியாரும் என் ஜாடையாத்தான் இருந்தார்.  என் மூஞ்சை உத்துப் பார்த்தவர், ‘டேய் கலியபெருமா! ஊருக்குள்ள ரொம்ப கலியபெருமாவா இருக்குடா.  உனக்கு அந்தப்பேரு வேணாம்டான்னு சொன்னதும், ‘ஊருக்குள்ள பொரிச்ச முறுக்குன்னு கூப்புடுவாங்க சார், வேணும்னா அதை வைச்சிக் கூப்புடுங்க சார்...’ன்னு சொல்லிட்டு பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு நின்னேன்.  டேய் நீ என்னைவிட வயசுல அழகா இருப்பேடா.  உன் அம்மா வைச்ச பேருல கொஞ்சம் மாத்தி சுந்தரபெருமாள்ன்னு கூப்பிடுறேன்டா,  உன் அப்பாக்கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்கிட்டு நாளைக்கு ரெக்கார்டு சீட்டு எழுதிடுறேன்.  (நான் அறிஞ்ச வரைக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுந்தரபெருமாள் கோயில் ஒரு ஊரோட பேரா மட்டும் தான் இருக்கு)
                நீ எப்பப் பொறந்தேன்னு உம்மாக்கிட்ட கேட்டுக்கிட்டு வாடா...’ன்னுட்டார்.  நான் என் அம்மாகிட்டகேட்டப்பா, ‘பெரியகாத்து அடிச்சப்ப நீ வயித்தில இருந்தே.  அப்பறம் வந்த சித்திரை மாசக்கடைசியில அமாவாசைக்கு மூணு நாளைக்கு முன்னால அந்தியில பொறந்தேன்னு சொன்னதை அப்படியே வாத்தியாருக்கிட்டச் சொல்லிட்டேன்.
                சுந்தரபெருமா! இந்த ஊருக்குள்ள எப்ப பெரிய புயல்காத்து அடிச்சுச்சின்னு எனக்கு எப்படிடா தெரியும்?  எங்க இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டு நான் மாட்டிக்காம ஒரு தேதியிலதான் பொறந்தேன்னு எழுதிடுறேன்னு சொன்னார்.
                வாத்தியாரு என்னா வேணும்ன்னாலும் எழுதிக் கிட்டும்ன்னு தான் அப்பைக்கு இருந்திருப்பேன்.  பொறந்த தேதியைப் பத்தி அப்பெல்லாம் யாரு கண்டுக்கிட்டா?  எங்கள் ஊருக்குள்ள பள்ளிக்கூடம் ஒன்னு வரும்ன்னு நினைச்சிக்கூட பார்த்திருக்கமாட்டாங்க.  காமராசர் முதலமைச்சரா வந்துதான் இந்த பிச்சைமுத்து வாத்தியாருக்கிட்ட கால்கடுதாசி கொடுத்து அனுப்ப ஊருக்குள்ள வந்தார்.  கூடவே அப்ப டிஸ்டிக்போர்டுல இருந்த முதலியார், பண்ணைக்கு எழுதிக் கொடுத்து அனுப்பியிருந்த கடுதாசியிலபள்ளிக்கூடம் ஏற்படுத்த ஒரு இடம் தர்றதுஎன்று வாத்தியாரை அனுப்பி வைச்சதைத் தட்டமுடியாம பண்ணைக்காரர் வீட்டுலேயே வண்டிக் கொட்டாவையில இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். 
                பண்ணைக்காரருக்கு இதிலயும் ஒரு கணக்கு இருந்திச்சி.  தான் ஊட்டுப்புள்ளையைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம வீட்டுலேயே வச்சி சொல்லிக் கொடுக்கச் சொல்லிட்டார்.  அந்த பிச்சமுத்து பறை வாத்தியாராம்.  அவன் பள்ளுபறைய னெல்லாம் தெரட்டி வச்சிக்கிட்டு பள்ளிக்கூடம் நடத்த எடம் கொடுத்திருக்கிறது தரித்திரத்தை வெலை கொடுத்து வாங்கியிருக்கிறாப் போலத்தான் இருக்கு.  அம்மையப்பன் காசுக்காரத்தெரு பள்ளிக்கூடத்துல ராஜகோபால் அய்யர் வாத்தியாரா இருக்கார்.  பேசாம நம்ம வீட்டுப்புள்ளைங்களை அங்க அனுப்பிடலாம்...’  குருக்கள் வீட்டம்மா பண்ணைக்கு மந்தரம் போட்டதும் பண்ணை சுருண்டுட்டு.
                ஊருக்குத் தெக்க தலையாரிகள் பொறுப்புல இருக்கிறவாடியை ஒழிச்சி கொடுக்கிறேன்னு சொல்லி வாத்தியாரை அனுப்பி வைச்சிட்டார்.  ஊருக்குக் கடைசியில புளியமரத் தடியில் இருந்தது அந்த வாடி.  கோட்டு ஆக்கையால கரும்பலகையைக் கட்டி கொட்டாவை குறுமாடியில் சுருக்குப் போட்டுத் தொங்கும்.  கை ஒடிஞ்சிப்போன நாற்காலி ஒன்னு கிடக்கும்... இங்கதான் எனக்கு அனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த இடம்.  என்னோட கால்சட்டைக்கால தெருத் தோழர்கள் பொட்டை சாமிநாதன், செல்லதுரை, தியாகராசன், ராசேந்திரன் இதுல சாமிநாதன் முண்டன்.  நாங்க நாலு பேரும் சேந்தாலும் அவனை தள்ளிடக்கூட முடியாது.  சண்டைன்னு வந்தா எங்களை வரைதரை இல்லாம அடிச்சிப்புடுவான்.  அந்த பயத்திலேயே இருப்போம்.  நாங்க அவனை ஒதுக்கிடவும் முடியாது.  அவன் துணையில்லாட்டா எங்க வீட்டுல இருக்கிற கறவை எருமைகளையும்  உழவுக்கு வச்சிருக்கும் எருமைக்கடாக்களையும் விடியறதுக்குள்ள பால்காரர் வர்றதுக்கு முன்னாடி குளத்துக்கு ஓட்டிக்கிட்டுப்போய் குளிப்பாட்டி ஓட்டுக்கிட்டு வந்து சேரமுடியாது.
                ட்டுருவான்னு அவன் கொடுக்கும் குரலுக்கு எருமைக கட்டுப்பட்டு அடங்கிடும்.  அவன்கிட்ட அபாரமான வசியசக்தி இருக்குன்னு நம்பிக்கிட்டு இருந்தோம்.  எருமைகளோடவே நாங்களும் குளிச்சிடுவோம்.  பொட்டைசாமிநாதனை சுளை இல்லாத முரட்டுப் பலாக்கான்னு தான் வாத்தியாரு சொல்லு வார்.  நான் ஆறாம் கிளாஸ்க்குப் போறவரைக்கும் அங்காளம் மைக்கு வேண்டுதல் விட்டு இருக்கும் மயிரை வாகு எடுத்து ரெட்டை ஜடை பின்னிவிடும் அம்மா.  புட்டாமாவு அடிச்சி கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வச்சிவிடும்.  நான் கண்ணாடி பாக்கிறவரைக்கும் ரொம்ப அழகாத்தான் இருந்தேன்.
                ஒவ்வொரு நாளும் காலையில நானும் சாமிநாதனும் வாத்தியாரு முன்னால முதல் ஆளா போய் நிப்போம்.  வாத்தி யாரு படிச்சிக் கொடுக்க ஊர்கோலி வரப் புறப்படும்போது நாங்களும் துணைக்குப் போவோம்.  ஓடி ஒழிஞ்சதுங்க போவ மீதி பத்து பேராச்சி தேறிடுங்க.  பள்ளிக்கூடத்துக்குத் திரும்பி வரும்போது சூரியன் உச்சிக்குக் கிட்டத்தில வந்திடும்.  அதுக்குப் பிறகு எங்களோட வாத்தியாரும் பொதி மணல்ல எழுதிக் கத்துக்கொடுப்பார்.  நாங்க எல்லோரும் எழுதி முடிக்கங்காட்டியும் சாமிநாதன், பசிக்குதுன்னு நாலுபேரை அழைச்சிக்கிட்டு பெரிய தோப்புக்குப் போயிடுவான்.  எந்த மரமா இருந்தாலும் அப்படித் தாவுவான்.  குரங்கு கூட அவன்கிட்ட பிச்சை வாங்கணும்.  எந்தப் பருவத்திலயும் ஏதாச்சும் காயோ பழமோ கிடைச்சிடும்.  மத்தியான வயிறு ஆறிடும்.  நாங்க நாலாவது வரும்போதுதான் மதிய உணவு போட்டாங்க.
                மாங்காணேசன், டீக்கடை ராஜாங்கம், தங்கையன் இவர்கள்ல ஒருத்தராச்சும் வாத்தியாரோடவே இருப்பாங்க.  பள்ளிக்கூடத்துக்கு ஒரு இடம் தேடியாகணுன்னு முடிவு செஞ்சாங்க.  ஊராட்சி ஒன்றியத் தலைவரா இருந்த முதலியாரை ஊராட்சி சாலையில் தென்னங்கன்னு நடு விழாவுக்கு அழைக்க ஏற்பாடாகியிருந்தது.  அன்னிக்கு எங்களை வச்சே தலைவரை குறுக்க மறிக்கிறதுன்னு திட்டம்.  அன்னிக்கு இருவதுக்குக் குறையாத புள்ளைங்க வந்துட்டுங்க.  நாங்க எப்புடி நடந்துக்கிறதுங்கிறத சொல்லிக் கொடுத்திட்டாங்க.  இந்த ஏற்பாடு பண்ணைக்கோ ஊராட்சித் தலைவருக்கோ தெரியாமத்தான்.  யாரும் நாங்க குறுக்க உக்காந்து மறைக்கப்போறோம்ன்னு எதிர்பார்க்கல.  தலைவர் காரை மறிச்சிவேண்டும் வேண்டும் பள்ளிக்கூடத்துக்கு எடம் வேண்டும்கோஷம் போட்டதும், தலைவர் திகைச்சிப் போயிட்டார்.  எறங்கி வந்தார்.  எனக்குச் சொல்லிக் கொடுத்ததை ஒன்னுவிடாம ஒப்பிச்சிட்டேன்.
                எங்களைத் தூண்டிவிட்டது வாத்தியாரும் அவரோடு சுத்திக்கிட்டு இருக்கிற கலகக்கார வங்கன்னு தலைவரோட எடுபிடிங்க வத்தி வச்சிட்டுங்க.  அவரு பெரிசா எடுத்துக்காம அவங்களைக் கூப்புட்டு வரச்சொல்லி, ‘சீக்கிரம் ஏற்பாடு செஞ்சு தாறேன்ன்னு சொன்னத நாங்க ஏத்துக்காம, ‘இப்பவே வேணும்ன்னு கோஷத்தைக் கிளப்பிட்டோம்.  வேற வழியில்லாம பண்ணைக்காரரைக் கூப்பிட்டு அவர் அனுபவத்தில இருந்த கோயில் இடத்தில பள்ளிக்கூடம் கட்ட ஆணை போட்டதும்தான் காரை போவவிட்டோம்.
                தத்திஉத்தி அம்மையப்பன் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.  அப்பதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் முச்சூடும் நடந்துகிட்டு இருந்துச்சு.  எல்லா மாணவர்களும் போராட்டத்தில குதிச்சதும் எங்க பள்ளிக்கூடத்திலயும் தீவிரமா எறங்கிட்டாங்க.  இந்தப் போராட்டத்தோட உச்சகட்டத்தில ஊருக்கு ஊரு முன்னுக்கு நின்னவங்களை கைது பண்ணிக்கிட்டு இருக்கும்போது, எங்கப் பள்ளிக்கூடத்துக்குத் தலைமை தாங்கின பழனி அய்யா, ஜெயராமன், லெட்சுமணன், ஜெயசீலன், காவனூர் கோ. கலியபெருமாள், கோவிந்தராசு இவங்களெல்லாம் தலைமறைவா இருந்துகிட்டு விடிஞ்சதும் தபால் ஆபீஸ் முன்னால வந்து நூத்துக்கு மேற்பட்டவங்களைத் தெரட்டிட்டாங்க.
                இந்தி ஒழிக! கக்கா!  மாணவர்கள் உனக்குக் கொக்கா?’ இப்புடி கோஷம் போட்டுக்கிட்டு கொடும்பாவி எரிக்கும்போது பெரிய கலவரமாயிட்டு.  போலீஸ் எல்லாரையும் சுத்தி வளைச்சி கைது பண்ணி லாரியில ஏத்திக்கிட்டாங்க.  அதில நானும் ஒருத்தனா இருந்தேன்.   நீடாமங்களம் பங்களாவில கொண்டுபோய் அடைச்சிட்டாங்க.  நாங்க காலையில வீட்டவிட்டு வந்தது.  கையில தம்புடி காசு கிடையாது.  ராத்திரி பத்துமணி வரைக்கும் சோறு தண்ணி காட்டல.  வேறுவேறு ஊருகளில் இருந்து கொண்டுவந்து அடைச்சிருந்தவங்களும் சேந்து சத்தம் போட ஆரம்பிச்சிட்டோம்.
                போலீஸூக்கு என்னா பண்ணுறதுன்னு மட்டுப்படாம போயிட்டு.  பன்னெண்டு மணிக்கு மேல எங்களை வெளியே விட்டுஓடுங்கடான்னு விரட்டி அடிச்சதும் பசியோட நடந்தே வந்துகிட்டு இருந்தோம்.  அப்ப வெளியே இருந்து எங்களுக்குத் தலைமை தாங்கியிருந்த .சி. மணியனோட, கலைஞர் கருணாநிதி தலைமை ஏற்று கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சோமசுந்தரம், ஜெயச்சந்திரன், மாங்காகணேசன், தங்கையன் கொரடாச்சேரிக்கு வந்து காத்துக்கிட்டு இருந்தாங்க.  இவங்களோடு பிச்சைமுத்து வாத்தியாரும் வந்துட்டார்.  பிச்சைமுத்து வாத்தியாரு என்னைப் பார்த்ததும், ‘சுந்தரபெருமான்னு அளக்கா என்னைத் தூங்கி முத்தம் கொடுக்கும்போது நான் அழுதுட்டேன்.  அப்ப கொரடாச்சேரி கழக உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு படிக்கும்போது போராட்டத்துக்கு தலைமை தாங்கியிருந்த தாழை
மு. கருணாநிதி, பொன்நரசிம்மன், வில்வளவன் இவங்கள்லாம் சேந்து ஒரு கடையைத் தொறக்க வச்சி ரொட்டியும் டீயும் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  என்னை பிச்சமுத்து வாத்தியாரே வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரும்போது என் அப்பா கண்ணு செவந்துபோய் ஆத்திரமா உக்காந்திருந்ததை நான் பார்த்ததும் வாத்தியாருக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிட்டேன்.  என்னோட கால்சட்டை தொப்பரையா நனைஞ்சி போயிட்டு. 
                என் அப்பா வாத்தியாரு மூஞ்சைப் பார்த்ததும் பொட்டிப் பாம்பாட்டம் அடங்கிப்போயி, ‘வாத்தியாரைய்யா! உங்க மூஞ்சிக்காவ இவனை உடுறேன்.  இல்ல...’ அப்பாவோட உதடும் கையும் துடிச்சிச்சி.  புள்ளை! மவனை வீட்டுக்குள்ள உள்ள அழைச்சிக்கிட்டுப் போங்க.  காலையில பேசிக்கலாம்...’ என் கையைப் பற்றி அப்பா கையில் கொடுத்தார். 
                அன்னிக்கு பிச்சமுத்து வாத்தியார் என்னைத் தூக்கிக் கொடுத்த முத்தத்தின் சுகம் தந்த  ஆனந்தக் களிப்பு என் நெஞ்சுக்குள் இப்பைக்கும் பரவிக்கிட்டுத்தான் இருக்கு.
புதியபார்வை’   16-31 மார்ச் 2007