Thursday 26 November 2015

தாண்டவபுரம் நாவல் இரண்டாம் பதிப்பின் முன்னுரை - சோலை சுந்தரபெருமாள்




தாண்டவபுரம் நாவல் இரண்டாம் பதிப்பின் முன்னுரை




இரண்டாம் பதிப்பின் முன்னுரை
மிழ் என்றால் துறை சார்ந்த அகப்பொருள் என்று சிறப்புப் பெயர் பெறும். இதனை மாணிக்கவாசகர், தன் திருக்கோவையார் என்னும் நூலினுள், “சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்துஎன் சிந்தையுள்ளும் / உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் / துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ / இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந் தெய்தியதே” (பாடல் 20) இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
சேக்கிழார், காரிநாயனார் புராணத்தில் காரிக்கோவை என்ற நூலை அகத்துறை விளக்கம் பெறுமாறு காரிநாயனார் எழுதினார். அதனை மூவேந்தரிடமும் எடுத்துச் சென்று படித்துக்காட்டி பரிசு பெற்று, அப்பொருள் கொண்டு சிவத்தொண்டு ஆற்றினார் என்று குறிப்பிடுகிறார். இதனால் தமிழும், அகவாழ்வும் சிவனடியார்களோடு பின்னிப்பிணைந்துள்ளன என்று தெளிவாகத் தெரியவரும்.
‘தமிழ் நெறி விளக்கம்’ என்னும் அகத்துறை இலக்கணம் ஒன்று உள்ளது. அது, ‘அன்பின் ஐந்திணை ஒழுக்கம்’ தமிழ்நெறி என்று வலியுறுத்துகிறது. இவ்வாறு தமிழ் என்றால் அகத்துறை என்ற சிறப்புப் பெயருக்கே உரியதாக அமைவதை உணரலாம்.
இதன் அடிப்படையிலேயே ஞானசம்பந்தர்  தமிழ் நெறியோடு தன்னை இணைத்துக் கொண்டதால் தன்னைத் தமிழாளன் என்றும் தமிழாகரன் என்றும் கலைஞானசம்பந்தன் என்றும் கூறிக் கொள்ள முடிந்தது. (இவ்விடத்தில் ஐந்திணைக்குரிய கடவுளின் இணைப்பாகவே சிவபெருமான் வடிவம் பெற்றிருக்கிறார் என்ற செய்தியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, சிவனும் தமிழோடு பொருந்தியக் கடவுள் ஆகிறார்)
ஞானசம்பந்தன் தன்னை தமிழுலகுக்கு வெளிப்படுத்திக் கொள்ளும் போது தற்புகழ்ச்சிக்காக கலைஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்ள வில்லை. ஆடலிலும் பாடலிலும் ஒருசேர தேர்ந்த கலைஞனாக உருபெற்று இருந்திருந்தார்.  அதனால் தான், தன்னை தமிழ்நெறியாளர் என்று அறிவித்துக் கொள்ள முடிந்தது.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தரின் அந்த ஆடல் சிற்பமே (பஞ்சலோகத்தில் ஆனது) அதற்கு சான்றாக வடித்து வைக்கப் பட்டிருக்கிறது. இன்றைக்கும் திருவாரூர் ‘புற்றிடம்கொண்டார்’ கோயிலில் உள்ள அருங்காட்சியகத்தில் ஆடல்கலை கொண்டிருக்கும் முத்திரையினை கொண்டு இருக்கிறது. சிற்பத்தில் உள்ள ஞானசம்பந்தரின் இடது கை முத்திரை ‘உஞ்சல்’ என்றும் வலது கை முத்திரை ‘உடுக்கை’ என்றும் ஆடல்கலையில் இன்றைக்கு ஈடுபாடு கொண்டு இருப்பவர்கள் சொல்லுகிறார்கள்.  இதனைப் போலவே பல்வேறு ஆடல் முத்திரைகளை கொண்ட ஆடல் சிற்பங்கள் சென்னை அருங்காட்சியகத்திலும், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் இருக்கிறதாம்.



(ஆடல்வல்லான் ஞானசம்பந்தர் ஆடல் சிற்பம் – நிழற்படம்) – Gnanasambandar
ஏழுவகையான இசை - ஏழுவகைத் திணைப்பண்களில் இருந்து சிவபெருமான் ஆடிய ஏழு வகையான தாண்டவங்கள் தோன்றின என்கிறார்கள். அவரே இந்த ஏழுவகையான தாண்டவங்களை படைத்தார் என்றும் அவரே நூற்றெட்டு தாண்டவங்களாக வளர்த்தெடுத்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த அடிப்படையான தாண்டவங்களில் இருந்து காலம் காலமாக ஒவ்வொரு கலைஞனும் தன்னுடைய புனைவாற்றலுக்கு ஏற்ப விருத்தி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது.   
திருஞானசம்பந்தரும் அப்படியான ஆடல்கலையில் வல்லவராக ஆடல்கலைஞர்களுள் சிறப்பிடம் பெற்றவராகப் போற்றப் பட்டு இருக்க வேண்டும். இந்தப் போற்றுதலுக்கு உரிய அந்தக் கலைஞனின் புனைவின் விருத்தியைச் சிற்பகலைஞன் வடித்து வைத்திருக்க வேண்டும். இச்சிற்பத்தில் - படத்தில் திருஞானசம்பந்தர் வெளிப்படுத்தும் கர்ணப்புனைவு ஊர்த்துவ தாண்டவத்தின் விருத்தியாக இருக்கலாம் என்று கொள்ள இடமிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.  
நிலவுடைமைச் சமூகக் கட்டுமானம் வளர்த்த தமிழோடும் தமிழ்மக்கள் பண்பாட்டோடும் தமிழ்மண்ணின் வரலாற்றோடும் நெருக்கமாகப் பின்னிப் பிணைக்கப்பட்டிருந்த தேவதாசிமரபுக்கு உட்பட்ட ஆடல்வல்லாள் ருத்திரதாசியான மனோன்மணி முற்றிலும் என்னுடைய புனைவுக்குட்பட்ட படைப்பே.
பரத்தையர் பிரிவை அனுமதித்திருக்கும் தொல்காப்பியம், ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்று கூறுவதின் மூலம் பரத்தையர் சமூகம் – முழுமை அடைந்த நிலவுடைமைச் சமூகத்தில் தேவதாசி சமூகமாக உருமாறிய சமூகம் -  அப்போதே தமிழ்ச்சமூகத்தில் இடம் பெற்றுள்ளதையும் அவர்கள் கடவுளோடும் மனிதர்களோடும் உறவு கொண்டு இருந்ததையும் இலக்கணப்படுத்தியுள்ளது. ஆகையால் பரவையாரிடம் சுந்தரர் பொருட்டு சிவபெருமான் தூது போனதாகச் சொல்லப்படுவது தமிழின் மீது கொண்ட காதலாலேயே எனலாம். இவ்விடம் பரவையார் தேவதாசி மரபினள் என்பதை மறந்து விடக்கூடாது.  இது சிவபெருமானுக்கும் தெரிந்திருக்கும் அல்லவா?
சுந்தரர், தேவதாசிமரபில் பிறந்த பரவையிடம் உறவு வைத்துக் கொள்ளுவதை மிகவும் விரும்பினார்.  இதற்கு சிவபெருமான் ஏற்பு அளித்திருக்கிறார் என்றால் அது தமிழ்நெறிக்கும் சிவநெறிக்கும் முரண்பட்டது அல்ல என்று தான் பொருள். அப்படியான பண்புடைய, என்னுடையப் புனைவு பாத்திரமான மனோன்மணியை திருஞானசம்பந்தரோடு  பிணைக்கப்பட்ட உறவு எப்படி பொருத்தமானதாக இல்லை என்று சொல்ல முடியும்?
தேவதாசி மரபில் பிறந்த மனோன்மணி, தனக்கு கைவரப்பெற்ற ஆடல்கலையினைக் கொண்டு சிவபெருமானோடு ஐக்கியமாகி சிவபக்தியில் இழைந்தவளாக இருக்கிறாள். அத்தோடு இல்லாமல்  இம்மண்ணில் தமிழ்ச்சைவம் தழைக்க, தானே சிவப்பணி ஆற்ற வேண்டும் என்று விருப்பம் கொண்டவளாக இருந்திருக்கிறாள். அப்படியான இந்த மனோன்மணி என்னுடையப் படைப்பின் வளர்ச்சிப் போக்கில் அருளாளர் மனோன்மணியாகியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைவாகப் பார்க்கும் போது தமிழ்ச்சைவம் சாதிக்கு எதிராகவும் வர்ணத்துக்கு எதிராகவும் போராடியது என்பதை படைப்பின் பாத்திரர்கள் மூலம் அறியமுடியும். இன்றைக்கும் சிவாலயங்களில் வழிபாடு நடத்தி வைக்கும் சிவாச்சாரிகள் ஒரு சாதியைச் சார்ந்தவர்களாக இல்லை.
மனோன்மணியானவள் இந்தப்படைப்புக்கு மையப்புள்ளியாக இல்லாவிட்டாலும் இவளின்றி ‘படைப்பு’ நிறைவை எட்டவே முடியாது. படைப்பின் இயக்கத்தின் உள்ளே மனோன்மணியாவள் ஞானசம்பந்தரிடம் சிவஅருள் பெற்று சிவத்தொண்டு ஆற்றியதோடு நின்றுவிடவில்லை. தமிழ்ச்சைவத்திற்கு ஒரு வாரிசை ஈன்ரெடுத்துத் தந்திருக்கிறார். திருஞானசம்பந்தனுக்குப் பிறகாகிய  தமிழ்சைவத்தின் வரலாற்றின் உருவமாக ‘வாரிசு’ புனையப்பட்டுள்ளது என்பதனை வாசகர்கள் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.
தமிழ்சைவர்களின் மேற்கண்ட கருத்துக்கு எதிராக, நவீன பிராமணியத்தை வளர்த்தெடுக்க விரும்பும் பழைய பிராமணியத்தின் வாரிசுகள் மனோன்மணியின் பாத்திரப்படைப்பு, திருஞானசம்பந்தரை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தியிருப்பதாக படைப்பைத் தரம் தாழ்த்திப் பேசினார்கள். இது எவ்வகையில் பொருந்தும்? என்று தமிழ்மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
வரலாற்று நெடுகிலும் காலம்தோறும் பிராமணியம், மற்றவர்களை ஒடுக்கிப்போடுவதிலும் அழித்து ஒழிக்கும் நடவடிக்கைககளிலும் திட்டமிட்டுச் செய்து வந்திருக்கிறது. அதன் போக்கையும் அவர்களுக்கென்று மறைமுகமாக இயங்கிக் கொண்டு இருந்த அமைப்புகளையும் கொண்டு சமூகத்தை எப்படி அடக்கி ஒடுக்கினார்கள் என்பதையும் படைப்பு வெளிப்படுத்தியிருக்கிறது.  அவர்கள் கை கொண்டிருந்தச் சாத்திர சம்பிராதாயத் தந்திர உபாயங்களை எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பது ஊடும்பாவுமாக படைப்பினுள் அம்பலப்பட்டுக் கிடக்கின்றன.  நவீன பிராமணியவாதிகளின் வாரிசுகளுக்கு ‘திருடனுக்கு தேள் கொட்டிய’ கதையாக ஆயிற்று.
இவை தான் தாண்டவபுரம் நாவலைத் தரம் தாழ்த்திப் பேசுவதற்குக் காரணம். நாவல் கமுக்கமாக வெளிப்படுத்துபவற்றை அவர்களால் அப்படியே வெளிப்படையாகப் பேசிட முடியவில்லை. அப்படியே பேசினால், தங்கள் பக்கம் தமிழ்மக்களைத் திரட்டி வைத்துக் கொள்ள  முடியாது என்பது அவர்களுக்கு தெரிந்த கதைதானே? அதனால் தான் சிவத்தொண்டரான அருளாளர் மனோன்மணியை இழிவு படுத்தினார்கள்.
ந்தப் படைப்பு, அச்சுஅசலான வரலாற்றுப் புத்தகமுமல்ல. திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நூலுமில்லை. கூடவே, தமிழ்ச்சைவம் எழுச்சிப் பெற்ற வரலாற்றுப் பின்னிணைப்பில் புனையப்பட்ட நாவல் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திருஞானசம்பந்தர் இம்மண்ணில் தோன்றிய மாமனிதர். மகத்தான கலைஞன். இவர் எழுதியிருக்கும் தேவாராமே இதற்குச் சான்று. வணிகர்களையும் சமஸ்கிருதத்தையும் முன்னிறுத்தி வைதீகஆட்சி பலப்படுத்தப்பட்டு இருந்தது இதற்கு எதிராக வேளாண்மக்களை ஒன்றுத்திரட்டி, தமிழையும் தமிழ்ச்சைவத்தையும் உயர்த்திப் பிடித்து ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று போராடியவர். தேர்ந்த கலைஞனாக இருந்த அவர் நடத்தியப் போராட்டத்தில் கலை, இலக்கியத்தை ஊடும்பாவுமாக பின்னிப்பிணைத்தார் என்பதை யாரும் மறுப்பதற்கு இடமில்லை. எனக்கும் இவற்றில் நிறைவான முழு உடன்பாடு உண்டு.
திருஞானசம்பந்தர் ஆடல், பாடல் கலையில் தேர்ந்த கலைஞனாக இல்லாவிட்டால் அவர் பெயரிலேயே அக்காலச் சமூகத்தில் ‘திருஞானசம்பந்த தலைகோலி’ என்ற பட்டம் உருவாக்கப்பட்டு இருக்க முடியுமா? ஆனால், உருவாக்கப்பட்டு இருக்கிறதே. அதோடு மட்டுமல்ல அக்காலத்தில் சிறந்து விளங்கிய ஆடல்மகளிருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறதே. இப்பட்டத்தை, ‘ஒலோக மாதேச்சுரம்’ என்று அழைக்கப்பட்ட ஐயாரப்பர் கோயிலில், ‘நக்கன் உடைய நாச்சியார்’ என்ற தேவதாசிமரபில் பிறந்த ஆடல்மகளிருக்கு வழங்கப்பட்டுயிருக்கிறதாமே?
எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தக் கல்வெட்டு ஒன்று, ‘திருஞானசம்பந்த தலைகோலி’ பட்டம் வழங்கியமைக்கு இன்றைக்கும் சான்றாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து தன் ஆய்வின் முடிவை வெளியிட்டு இருப்பவர் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் என்பதும் கவனத்துக்கு உரியது.
க்தியியக்காலச் சமூகப் பண்பாட்டு அம்சங்களை உள்வாங்கியே ‘தாண்டவபுரம்’ படைப்பாகியிருக்கிறது. விரிந்து பரந்து பட்ட அக்காலப் பல்லவப் பேரரசில் சமணமதத்தின் ஆட்சியும் அதன் அதிகாரப் போக்கும் மேலோங்கியிருந்தது. கூடவே, சமணப் பள்ளிகளே நிலவுடைமை அமைப்பாக மாறியிருந்தது.
பல்லவ பேரரசின் ஒண்டு குடியாக  இருந்த சோழச்சிற்றரசு – பழையாறை தனக்கே உரியதான போக்கில் தமிழையும் சிவத்தையும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை கமுக்கமாகச் செய்து வந்திருக்கிறது. இந்த ஏற்பாட்டில் தங்களையும் இணைத்துக் கொண்டவர்களே திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும். இவர்களே மக்கள் இயக்கமான பக்தி இயக்கத்திற்குத் தலைமை தாங்கியிருக்கிறார்கள்
பிற்காலத்தில் விரிவான  சோழப்பேரரசை நிறுவிய இராஜராஜனின் அரசாட்சி தொடங்கி பிராமணியத்தையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்தார்கள். தமிழையும் தமிழ்ச் சைவத்தையும் அவர்களால் முற்றாக நிராகரிக்க முடியாமல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்க செல்லரித்துக் கிடந்த தேவாரத்தை  நம்பியாண்டார் நம்பி மூலம் மீட்டு எடுக்க உதவியதோடில்லாமல் திருஞானசம்பந்தர் காலத்து தமிழ் இசைக்குறிப்புகளையும் இணைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்ச்சைவத்திற்கும் பிராமணியத்திற்கும் உள்ள முரண்பாட்டை வேளாண் உற்பத்தியில் இருந்த மக்கள், வணிகர்களால் சுரண்டப்பட்ட  வரலாற்றுப் பின்னணியில் படைப்பாக்க வேண்டும் என்று எனக்கு இருந்த உந்துதலே, ‘தாண்டவபுரம்’ நாவல் வடிவம் கொள்ளச் செய்திருந்தது.  
“…தேவாரம் – சம்பந்தர் – சமணர் இவர்தம் போராட்டம் எல்லாம் அக்கால சமுதாயத்தின் முரண்பாடுகளை எல்லாம் தெளிவாகக் காட்டும் கண்ணாடி! நம் முகத்தை நாம் பார்த்துக் கொள்ள கண்ணாடி வேண்டாமா? இந்தக் கண்ணடி தான் தேவாரம். அது நம்முடைய சொத்து, மரபு! மக்களின் மொழியில் வழிபாடு இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக காட்டக் கூடிய மரபு, போராட்டத்தின் தொடர்ச்சியைக் காட்டும் மரபு அது தான் முற்போக்கு மரபு!” (சிகரம் .செந்தில்நாதன், சம்பந்தரும் சமணப் போராட்டமும், முற்போக்குத் தமிழ் மரபு சிறப்பு மலர், 2015, வெளியீடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
இந்த தாண்டவபுரம் நாவல் 2011 இல் முதல் பதிப்பாக வெளிவந்தது. அடுத்து அடுத்து மறு அச்சாக்கம் பெற்று வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இலக்கியப் புனைவுகள்  இரண்டாம் பதிப்பை எட்டும் போது  பிழைத்திருத்தம் செய்வது உண்டு. படைப்பாளி மீண்டும் அந்தப்படைப்பினுள் நகாசு நுட்ப வேலைப்பாடுகளைச் செய்வதில்லை. இந்த தாண்டவபுரம் நாவலை இரண்டாம் பதிப்பு வெளியீடும் செய்யும் முன் நகாசு வேலைப்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை எனக்கு இருந்தது.   அவ்விடத்தினை நிறைவு செய்திருக்கிறேன்.  அதனால் அறுபத்திரண்டாம் அத்தியாயத்தின் இறுதிப்பகுதி விரிவடைந்திருக்கிறது. இதன் மூலம் இந்தப்படைப்பு நிறைவெய்தியிருப்பதாக  படைப்பாளியாகிய எனக்கு மனநிறைவைத் தருகிறது.
-    சோலைசுந்தரபெருமாள்


Saturday 31 January 2015

சாகித்திய அகாடமியும் காமக்யா கோயிலும் - சோலைசுந்தரபெருமாள்



சாகித்திய அகாடமி தன்னுடைய அறுபதாவது ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்வை அசாம் மாநிலம் ஹொகாத்தியில் (22, 23, 24 – ஆகஸ்ட் 2014) ஆகிய மூன்று நாட்கள் நடத்தியது.
பிரமபுத்திரா நதிக்கரை படகுத்துறையை ஒட்டி அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரா பண்பாட்டு நிறுவன அரங்கில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான அகாடமி  விருது வழங்கும் விழாவினையும் கவிதை வாசித்தல், சிறுகதை வாசித்தல், எதற்காக எழுதுகிறேன் என்ற வகைபாட்டில் எழுத்தாளர்கள் சந்திப்பினையும் (Abhivyakti)  நடத்தியது.
இந்த சந்திப்பில் சிறுகதை வாசிப்புக்கு நானும், கவிதை வாசிப்பிக்கு அ. வெண்ணிலாவும் கலந்து கொண்டோம். தமிழ் மொழிபெயர்ப்புக்கென்று விருது பெற்று  பெங்களூரை வாழிடமாகக் கொண்டிருக்கும் இறையடியான் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றார்.
சென்னையில் இருந்து ஹொகாத்தி போய் சேர நான்கு மணிநேரம் தான் தேவைப்பட்டது. பயண ஏற்பாடுகளையும் தங்குமிடம், உணவு உட்பட அனைத்தையும் அகாடமி திட்டமிட்டு சிறப்பானதொரு முறையில் ஏற்பாடு செய்திருந்தது.
எனக்கு சகத்தோழராக கேரளாவைச் சேர்ந்த ஆஷாமேனன் அமைந்து போனார். எதற்காக எழுதுகிறேன் என்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவருக்கு மலையாளம் தாய்மொழியாக இருந்தாலும் தமிழிலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் புலமை பெற்றவராக இருந்தார்.
அறிமுக அளவிலான ஆங்கிலம் அறிந்திருக்கும் எனக்கு அவரின் தோழமை கிட்டியிராவிடில் அந்த மூன்று நாட்களும் இறுக்கமடைந்து போயிருக்கும். அவ்விடத்தில் எந்த ஒரு அறிமுகத்திற்கும் ஆங்கிலமோ அசாமியோ இந்தியோ தெரிந்திந்திருக்கும் பட்சத்தில் தான் எளிதாகவும் மகிழ்வாகவும் செயல்பட முடியும் என்ற உணர்வுக்குத் தள்ளப்பட்டிருந்தேன்.
அமர்வுகளில் வாசிக்கப்படும் படைப்புகள் ஆங்கிலத்திலோ இந்தியிலோ தான் அமைந்திருக்க வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டு இருக்கிறது.
நான் வாசிக்க இருந்த ‘வண்டல்’ சிறுகதையைத் தோழர் இரா.தாமோதரன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்திருந்தார். எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அமர்வில் நிதானமாக வாசித்திருப்பதாக உணர்ந்தேன். அந்த அமர்வுக்குத் தலைமை ஏற்றிருந்த அசாமிய எழுத்தாளரும் விமர்சகருமான திரு அனில்போரோ அவர்கள் வண்டல் சிறுகதையின் வடிவத்தினையும் உள்ளடக்கத்தினை விரிவாகவே எடுத்துரைக்கும் போது தமிழ்நாட்டில் வேளாண்வாழ்க்கையில் ஏற்பட்டு இருக்கும் சரிவை காட்டுவதாகச் சொன்னார்.
தனி உரையாடலின் போது, நான் வாசித்த வண்டல்  சிறுகதை செரிவுடன் இருந்தது என்று தெலுகு எழுத்தாளர் திரு எம்.நரேந்திரா அவர்களும் மராத்தி எழுத்தாளர் திரு மகேந்திரகாடம் அவர்களும் கை குலுக்கிப் பாராட்டினார்கள்.
மறுநாள் காலையில் உணவு உண்டு தங்கும் விடுதியின் வரவேற்பறையில் எழுத்தாளர்கள் பலரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஆஷாமேனன் அவர்களும் அவ்விடத்திற்குப் போய் அமர்ந்தோம் திரு நரேந்திரா அவர்கள் கைக்குலுக்கி, “உங்களுடைய கதைவாசிப்பு நிகழ்வையும் அந்தக்கதையைப் பற்றிய சிறுகுறிப்பையும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பினார்கள் என்றும் ஆங்கில நாளிதழில் படத்தோடு செய்தி வெளிவந்திருப்பதாகவும் சொன்னார்.
போதாமையோடு கூடிய என்னுடைய ஆங்கில உச்சரிப்பில் வாசித்திருந்தச் சிறுகதை, அதன் உள்ளடக்க, வடிவ பலத்தில் தான் கேட்டவர்களைப் போய் சேர்ந்திருப்பதாக உணர்ந்து கொண்டேன். அதே நேரம் எனக்கு இருக்கும் போதாமையும் ஆங்கில அறிவை நாம் பெறுவதற்கு கவனம் செலுத்தாமல் காலத்தைப் போக்கிக் கொண்டு இருந்திருக்கிறோமே என்ற ஆதங்கம் என்னை உறுத்திக் கொண்டிருந்தது.
இதனைத் தோழர் சி.அறிவுறுவோன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். “சோலை! உங்கள் ஆதங்கம் பொருளற்றது. அடிமைத்தனமானது. இந்த நிறுவனத்தின் நோக்கம், படைப்பாளிகளை கௌவரப்படுத்தவும் பல தேசியமொழிகளைக் கொண்டு இருக்கும் இந்தியமண்ணில் மொழிகளிடையே சமத்துவத்தை நிலைநாட்டவும் ஆதிக்கமின்மையை உறுதிப்படுத்தவுமே அந்தந்த மொழி படைப்பாளிகளை கூட்டுவித்து இப்படியான சந்திப்புகளை நடத்திடும் இலக்கிய அமைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதே. அப்படி எதுவும் நடத்தப்படுகிறதா? உங்களைப் போன்றவர்கள் தான் இதற்கு விடை காணச் சிந்திக்க வேண்டும்…” கேள்வி எழுப்பி அதற்கு விடை காண வேண்டும் என்று அழுத்தமாகப் பேசினார்.
இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்டு இருக்கும் இருபத்துமூன்று மொழிகளுமே சமத்துவம் கொண்டவையாகும். இதனை உறுதிப்படுத்திடும் போது அந்தந்த மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளும் சமத்துவம் கொண்டவையாகவே இருக்கும். இந்த இருபத்து மூன்றில் ஒன்றாக இந்திமொழி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்திப் படைப்பாளிகளுக்கு மட்டும் தனித்த கௌரவம் தரப்படுவது சமத்துவமின்மையைக் காட்டுகிறது. இந்தி மொழியில் படைப்பைச் செய்யும் படைப்பாளிகள் சிறந்தவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் கருத ,இடம் அமைத்துத்தரப்படுகிறது.
மற்றைய மொழிபடைப்பாளிகளின் சுயப்படைப்புகளை  ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய வைத்து வாசிக்கச் செல்லி  வாசிப்பு அரங்கம் நடத்தும் போதே…  பிறமொழி படைப்புகள் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுகின்றன. இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொண்டு இருக்கும் மொழிகளுக்கிடையேச் சமத்துவத்தைக் குலைத்து விடுகிறது. அதேசமயம் சமத்துவமின்மையை நியாயப்படுத்தும் அதிகாரம் கொண்ட இலக்கிய அமைப்பாக சாகித்திய அகாடமி மாறிப்போகிறது.
இப்போக்கு களையப்பட வேண்டும். தன்னாட்சிமை கொண்ட அமைப்பின் உண்மையான நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அந்தந்த மொழி படைப்புகளை அந்தஅந்த மொழியிலேயே வாசிக்கச் செய்ய வேண்டும். கூடவே இலக்கியச் சந்திப்புகளை அனைத்துமொழி பேசும் மக்களிடையே நடத்தப்படும் போது அந்த படைப்பாளியும் படைப்பும் படைப்பு மொழியும் கெளரவம் பெறுவார்கள். சமத்துவம் உயர்ந்து நிற்கும்.  படைப்பின் மொழியே தெரியாத அல்லது புரியாத போது படைப்பு உள்வாங்கி வைத்திருக்கும் மக்களின் பாண்பாட்டு அம்சங்களையும் வாழ்நிலையையும் பிறமொழி பேசும் மக்களிடையே எப்படி பகிர்ந்துக் கொள்ளச் செய்ய முடியும்?  இதனால் இலக்கியப்படைப்பு செய்திடும் பயனை விளைவித்திட முடியுமா? என்ற கேள்விகள் எழும் அல்லவா?.
மொழிவாரி ஒவ்வொரு மாநிலங்களின் நடத்தப்படும் இலக்கியச் சந்திப்புகளில் பல மொழி படைப்பாளிகள் படைப்புகளை வாசிக்கும் போது அந்தந்த மொழிகளின் படைப்புகளை  மொழிபெயர்ப்பு செய்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது அனைத்து மொழிகளிலும் படைக்கப்படும் படைப்புகள்  எளிதாக மக்களிடம் போய் சேரும். படைப்புகள் அவரவர் மொழிகளில்   ஏற்படுத்திடும் ரசவாதத்தை. மக்களின் மனங்களில்  எளிதாக   நெகிழ்வைப் பெறச் செய்துவிடும். இதனால் எந்த ஒருமொழி மீதும் எந்த மொழிப் படைப்பு மீதும் அதிகாரம் செலுத்த இடமில்லாமல் போகும். நடுவன்அரசு தன்னாட்சி நிறுவனமாக  சாகித்ய அகாடமியை ஏற்படுத்தியதின் நோக்கம் முழுமையடையும் என்று நம்பலாம்.




 ஹெகாத்தியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காமக்யாக் கோயில் புகழ்பெற்றது என்று அறிய முடிந்தது. இக்கோயிலைப் பார்த்து விட்டுத்தான் ஊர் புறப்படுவது என்ற முடிவில் சென்று இருந்தேன். அந்தக்கோயில் ஒரு பெரிய குன்றில் மேல் இருக்கிறது. மேலேறிச் சென்றால் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இலவசத் தரிசனம்,  ரூ100, 300 கட்டணத் தரிசனம் என்ற வகைபாட்டில் உள்ளேச் செல்ல ஏற்பாடுகள் இருந்தன.
மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. குன்றின் மேல் கோபுரம், பிரகாரம் என்று இன்றைய கோயில்கள் அமைப்பில் கட்டப்பட்டு இருந்தாலும் அது குகைக்கோயிலாகத் தான் இருக்கிறது. புதியதாக கட்டப்பட்டு நெறிப்படுத்தியிக்கும் வரிசையில் காத்திருந்து போகும் நீண்ட பாதை, கம்பி அடைப்புகளாய் பிரகாரங்களைச் சுற்றிச் செல்லுகிறது. குகை வாயிலை ஒட்டிய பிரகாரத்தில் அவ்வப்போது ஆடுகளையும் மாடுகளையும் குறிப்பாக எருமைமாடுகளைக் காவுகொடுக்கும் சடங்கு நடத்தப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
குகைக்குள் இறங்கும் பாதை குறுகலாக இருக்கிறது. கொஞ்சம் விசாலமான இடத்தில் மொழுமொழுப்பான பெரிய கல் இருக்கிறது. அதன் மேல் ஏராளமாக சிவப்பு நிறப் பூக்களைக் குவித்திருந்தார்கள். அந்த பெரியகல்லின் மீது சிவலிங்கமும் அதன் பக்கவாட்டுகளில் ஆண்பெண் கலவி உருவங்களும் வடிக்கப்பட்டு இருக்கிறதாம்.  இவற்றை நேரிட்டு பார்க்க முடியாதவாறு மலர்களைக் கொண்டு போர்த்தி வைத்திருக்கிறார்கள். அதனை தொட்டு வணங்க பலிபீடத்தின் மீது நூறுரூபாய்க்கு மேல் வைத்தால் அனுமதிக்கிறார்கள்.
வைதீககர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது குகை. மினுக்குக்கென்று எரியவிட்டு இருக்கும் மின்விளக்கு ஒளியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். குகை சுவர்களில் ஏராளமாக புடைப்புச்சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஏதோ ஒரு காலத்தில் அந்தச் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சியச் சிற்பங்களை உற்றுப் பார்க்கும் போது கலவிச்  சிற்பங்களாகத் தெரிந்தன.
சறுக்கலானப் பாதையில் இறங்கினால் கொப்பறை வாயில் இருளில் கிடக்கிறது. வாயிலை ஒட்டியது போல சின்னதான மண்டபம் இருக்கிறது. அதன் நடுவில் தான் ‘காமக்யா’ வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. காமக்யா என்பது பெண்குறி. குடைவு மண்டபத்தின் கீழ் உள்ள பாறையில் செதுக்கப்பட்டு இருக்கும் பெண்குறி ஒரு பாகத்திற்குள்  உள்ளடங்கி விடும். பளிங்கு போன்ற வழுவழுப்பான அந்தப் படிமத்தின் மீது குங்குமத்தைக் கொட்டி வைத்திருக்கிறார்கள்.
“…காமக்யா என்ற புகழ் பெற்றக் கோயிலில் உள்ள பெண்தெய்வத்தின் படிமம் யோனியாகும். பெண் பிறப்புறுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இயற்கையின் வளமைக்கு ஆதாரமான பொருள் செழிப்புடன் இணைக்கப்பட்டுள்ளதைக் காணவேண்டும்…” (உலகாயதம் – தேவிபிரசாத்)
கொப்பறை வாயிலில் இறங்கினால் அந்தப் படிமத்தை சுற்றி ஒருநபர் மட்டுமே குனிந்துப் போகக்கூடிய வழி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் வழியே சுற்றிவந்து தான் வணங்குகிறார்கள். காமக்யாவின் அடிப்பகுதியில் இருக்கும் நீர் தாரையில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்ததைப் பார்த்தேன்.  தொல்குடி சமூகபூசாரி ஒருவர் அதன் அருகில் அமர்ந்து வணங்குபவர்கள் காமாக்காவின் நீர்தாரை வெளிப்படும் இடத்தில் மண்டியிட்டு அந்த ‘தாரை’ யின் மீது கை வைத்து தொட்டு வணங்கி அந்த நீரை புனிதநீராக கருதி தலையில் தெளித்துக் கொள்ளவும் சிறிது அருந்தவும் அனுமதிக்கிறார். பெரும்பாலனவர்கள் அந்தப் பூசாரிக்கு நூறுரூபாய்க்கு மேல் காணிக்கைத் தருகிறார்கள்.
இந்தப் பெண்குறி வழிபாடு தொல்குடிச் சமூக விளைச்சல் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இதன் பூர்வாங்க வரலாற்றை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் உலகாயதம் என்ற நூல் வழி  விரிவாக அறியலாம்,  தினம்தினம் ஆயிரக்காணக்கான மக்கள் வந்து வழிபாடு செய்து விட்டுச் சொல்கிறார்கள் என்றும் அறியமுடிகிறது,
ஒவ்வொரு முழுநிலா நாளிலும் காமக்யாவின் நீர்தாரையில் இருந்து மாதவிடாய் ரத்தம் வெளிவருகிறதாம். இந்த ரத்தம் புனிதசெந்தூரம் என்று ஒவ்வொரு துளியையும் ஆயிரக்கானக்கான ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்களாம். குழந்தைப்பேறு எட்டாதவர்கள் நாற்பத்தெட்டு நாள் விரதம் இருந்து காமக்யாவை வணங்கி புனித ரத்தத்தை பெற்று தரிக்கொள்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டி விடுவதாக ஒரு நம்பிக்கை மக்களிடையே இருப்பதாக அறிந்தேன்..  
மக்களிடம் இருக்கும் நம்பிக்கை ஒரு புறம் இருக்கட்டும். இது வைதீகத்தின் சூதடி என்று உறுதியாக சொல்ல முடியும். காமக்யாவில் இருந்து புனித ரத்தம் எதுவும் வெளிப்பட வாய்பே இல்லை. நான் முதலில் குறிப்பிட்டுள்ளபடி தினம்தினம் நூற்றுக்கணக்கான கால்நடைகள் காவு கொடுக்கப்படுகிறது.
இந்தக் கால்நடைகளை மக்கள் தங்கள் கால்நடை பெருகி வாழ்வு தர வேண்டி செலுத்தும் காணிக்கையே. இந்த கால்நடைகளையே பலியிடுகிறார்கள். அப்போது சிந்தும் அந்த ரத்தத்தைக் குளிர்பதனத்தில் வைத்து கெட்டுவிடாமல் பாதுகாப்புச் செய்து அதனை குறிப்பிட்ட நாளில் காமக்யாவின் நீர்தாரைக்கு செலுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பது தான் உண்மையாக இருக்க முடியும்.
இந்த காமக்யா வழிபாடு தொல்குடி சமூகம், வாழ்க்கையைத் தொடங்கிய இடமெல்லாம் இருந்திருக்க வேண்டும். இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சி தான் சிவலிங்க வழிபாடாக வந்திருக்க முடியும். காமக்யா வழிபாட்டின் எச்சமாக இன்றும் சான்றாக  அசாம் மாநிலம் கௌகாத்தியில் இருப்பதைப் பார்க்க முடிகிறது..
அசாம் மாநிலம் ஹெகாத்தியில்  சாகித்ய அகாடமி நடத்திய இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியை விட காமக்யா கோயிலுக்குப்போய் பார்த்து வந்தது தான் என் மனதைவிட்டு நீங்காமல் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘தமிழ்மண்ணில் திருமணம்’ என்ற ஆய்வுக் கட்டுரை எழுதும் போது தொல்குடி சமூகம்  பெண்குறியை வழிபாடு நடத்துவதை கொண்டிருக்கும். அதற்கு சான்றாதாரத்தை காண வேண்டும் என்ற அவா மனதில் எழுந்திருந்தது. அந்த ஆசையை இந்தப் பயணம் நிறைவேற்றியிருக்கிறது.