Saturday 31 January 2015

சாகித்திய அகாடமியும் காமக்யா கோயிலும் - சோலைசுந்தரபெருமாள்



சாகித்திய அகாடமி தன்னுடைய அறுபதாவது ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்வை அசாம் மாநிலம் ஹொகாத்தியில் (22, 23, 24 – ஆகஸ்ட் 2014) ஆகிய மூன்று நாட்கள் நடத்தியது.
பிரமபுத்திரா நதிக்கரை படகுத்துறையை ஒட்டி அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரா பண்பாட்டு நிறுவன அரங்கில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான அகாடமி  விருது வழங்கும் விழாவினையும் கவிதை வாசித்தல், சிறுகதை வாசித்தல், எதற்காக எழுதுகிறேன் என்ற வகைபாட்டில் எழுத்தாளர்கள் சந்திப்பினையும் (Abhivyakti)  நடத்தியது.
இந்த சந்திப்பில் சிறுகதை வாசிப்புக்கு நானும், கவிதை வாசிப்பிக்கு அ. வெண்ணிலாவும் கலந்து கொண்டோம். தமிழ் மொழிபெயர்ப்புக்கென்று விருது பெற்று  பெங்களூரை வாழிடமாகக் கொண்டிருக்கும் இறையடியான் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றார்.
சென்னையில் இருந்து ஹொகாத்தி போய் சேர நான்கு மணிநேரம் தான் தேவைப்பட்டது. பயண ஏற்பாடுகளையும் தங்குமிடம், உணவு உட்பட அனைத்தையும் அகாடமி திட்டமிட்டு சிறப்பானதொரு முறையில் ஏற்பாடு செய்திருந்தது.
எனக்கு சகத்தோழராக கேரளாவைச் சேர்ந்த ஆஷாமேனன் அமைந்து போனார். எதற்காக எழுதுகிறேன் என்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவருக்கு மலையாளம் தாய்மொழியாக இருந்தாலும் தமிழிலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் புலமை பெற்றவராக இருந்தார்.
அறிமுக அளவிலான ஆங்கிலம் அறிந்திருக்கும் எனக்கு அவரின் தோழமை கிட்டியிராவிடில் அந்த மூன்று நாட்களும் இறுக்கமடைந்து போயிருக்கும். அவ்விடத்தில் எந்த ஒரு அறிமுகத்திற்கும் ஆங்கிலமோ அசாமியோ இந்தியோ தெரிந்திந்திருக்கும் பட்சத்தில் தான் எளிதாகவும் மகிழ்வாகவும் செயல்பட முடியும் என்ற உணர்வுக்குத் தள்ளப்பட்டிருந்தேன்.
அமர்வுகளில் வாசிக்கப்படும் படைப்புகள் ஆங்கிலத்திலோ இந்தியிலோ தான் அமைந்திருக்க வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டு இருக்கிறது.
நான் வாசிக்க இருந்த ‘வண்டல்’ சிறுகதையைத் தோழர் இரா.தாமோதரன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்திருந்தார். எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அமர்வில் நிதானமாக வாசித்திருப்பதாக உணர்ந்தேன். அந்த அமர்வுக்குத் தலைமை ஏற்றிருந்த அசாமிய எழுத்தாளரும் விமர்சகருமான திரு அனில்போரோ அவர்கள் வண்டல் சிறுகதையின் வடிவத்தினையும் உள்ளடக்கத்தினை விரிவாகவே எடுத்துரைக்கும் போது தமிழ்நாட்டில் வேளாண்வாழ்க்கையில் ஏற்பட்டு இருக்கும் சரிவை காட்டுவதாகச் சொன்னார்.
தனி உரையாடலின் போது, நான் வாசித்த வண்டல்  சிறுகதை செரிவுடன் இருந்தது என்று தெலுகு எழுத்தாளர் திரு எம்.நரேந்திரா அவர்களும் மராத்தி எழுத்தாளர் திரு மகேந்திரகாடம் அவர்களும் கை குலுக்கிப் பாராட்டினார்கள்.
மறுநாள் காலையில் உணவு உண்டு தங்கும் விடுதியின் வரவேற்பறையில் எழுத்தாளர்கள் பலரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஆஷாமேனன் அவர்களும் அவ்விடத்திற்குப் போய் அமர்ந்தோம் திரு நரேந்திரா அவர்கள் கைக்குலுக்கி, “உங்களுடைய கதைவாசிப்பு நிகழ்வையும் அந்தக்கதையைப் பற்றிய சிறுகுறிப்பையும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பினார்கள் என்றும் ஆங்கில நாளிதழில் படத்தோடு செய்தி வெளிவந்திருப்பதாகவும் சொன்னார்.
போதாமையோடு கூடிய என்னுடைய ஆங்கில உச்சரிப்பில் வாசித்திருந்தச் சிறுகதை, அதன் உள்ளடக்க, வடிவ பலத்தில் தான் கேட்டவர்களைப் போய் சேர்ந்திருப்பதாக உணர்ந்து கொண்டேன். அதே நேரம் எனக்கு இருக்கும் போதாமையும் ஆங்கில அறிவை நாம் பெறுவதற்கு கவனம் செலுத்தாமல் காலத்தைப் போக்கிக் கொண்டு இருந்திருக்கிறோமே என்ற ஆதங்கம் என்னை உறுத்திக் கொண்டிருந்தது.
இதனைத் தோழர் சி.அறிவுறுவோன் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். “சோலை! உங்கள் ஆதங்கம் பொருளற்றது. அடிமைத்தனமானது. இந்த நிறுவனத்தின் நோக்கம், படைப்பாளிகளை கௌவரப்படுத்தவும் பல தேசியமொழிகளைக் கொண்டு இருக்கும் இந்தியமண்ணில் மொழிகளிடையே சமத்துவத்தை நிலைநாட்டவும் ஆதிக்கமின்மையை உறுதிப்படுத்தவுமே அந்தந்த மொழி படைப்பாளிகளை கூட்டுவித்து இப்படியான சந்திப்புகளை நடத்திடும் இலக்கிய அமைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதே. அப்படி எதுவும் நடத்தப்படுகிறதா? உங்களைப் போன்றவர்கள் தான் இதற்கு விடை காணச் சிந்திக்க வேண்டும்…” கேள்வி எழுப்பி அதற்கு விடை காண வேண்டும் என்று அழுத்தமாகப் பேசினார்.
இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்டு இருக்கும் இருபத்துமூன்று மொழிகளுமே சமத்துவம் கொண்டவையாகும். இதனை உறுதிப்படுத்திடும் போது அந்தந்த மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளும் சமத்துவம் கொண்டவையாகவே இருக்கும். இந்த இருபத்து மூன்றில் ஒன்றாக இந்திமொழி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இந்திப் படைப்பாளிகளுக்கு மட்டும் தனித்த கௌரவம் தரப்படுவது சமத்துவமின்மையைக் காட்டுகிறது. இந்தி மொழியில் படைப்பைச் செய்யும் படைப்பாளிகள் சிறந்தவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் கருத ,இடம் அமைத்துத்தரப்படுகிறது.
மற்றைய மொழிபடைப்பாளிகளின் சுயப்படைப்புகளை  ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய வைத்து வாசிக்கச் செல்லி  வாசிப்பு அரங்கம் நடத்தும் போதே…  பிறமொழி படைப்புகள் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுகின்றன. இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொண்டு இருக்கும் மொழிகளுக்கிடையேச் சமத்துவத்தைக் குலைத்து விடுகிறது. அதேசமயம் சமத்துவமின்மையை நியாயப்படுத்தும் அதிகாரம் கொண்ட இலக்கிய அமைப்பாக சாகித்திய அகாடமி மாறிப்போகிறது.
இப்போக்கு களையப்பட வேண்டும். தன்னாட்சிமை கொண்ட அமைப்பின் உண்மையான நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அந்தந்த மொழி படைப்புகளை அந்தஅந்த மொழியிலேயே வாசிக்கச் செய்ய வேண்டும். கூடவே இலக்கியச் சந்திப்புகளை அனைத்துமொழி பேசும் மக்களிடையே நடத்தப்படும் போது அந்த படைப்பாளியும் படைப்பும் படைப்பு மொழியும் கெளரவம் பெறுவார்கள். சமத்துவம் உயர்ந்து நிற்கும்.  படைப்பின் மொழியே தெரியாத அல்லது புரியாத போது படைப்பு உள்வாங்கி வைத்திருக்கும் மக்களின் பாண்பாட்டு அம்சங்களையும் வாழ்நிலையையும் பிறமொழி பேசும் மக்களிடையே எப்படி பகிர்ந்துக் கொள்ளச் செய்ய முடியும்?  இதனால் இலக்கியப்படைப்பு செய்திடும் பயனை விளைவித்திட முடியுமா? என்ற கேள்விகள் எழும் அல்லவா?.
மொழிவாரி ஒவ்வொரு மாநிலங்களின் நடத்தப்படும் இலக்கியச் சந்திப்புகளில் பல மொழி படைப்பாளிகள் படைப்புகளை வாசிக்கும் போது அந்தந்த மொழிகளின் படைப்புகளை  மொழிபெயர்ப்பு செய்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது அனைத்து மொழிகளிலும் படைக்கப்படும் படைப்புகள்  எளிதாக மக்களிடம் போய் சேரும். படைப்புகள் அவரவர் மொழிகளில்   ஏற்படுத்திடும் ரசவாதத்தை. மக்களின் மனங்களில்  எளிதாக   நெகிழ்வைப் பெறச் செய்துவிடும். இதனால் எந்த ஒருமொழி மீதும் எந்த மொழிப் படைப்பு மீதும் அதிகாரம் செலுத்த இடமில்லாமல் போகும். நடுவன்அரசு தன்னாட்சி நிறுவனமாக  சாகித்ய அகாடமியை ஏற்படுத்தியதின் நோக்கம் முழுமையடையும் என்று நம்பலாம்.




 ஹெகாத்தியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காமக்யாக் கோயில் புகழ்பெற்றது என்று அறிய முடிந்தது. இக்கோயிலைப் பார்த்து விட்டுத்தான் ஊர் புறப்படுவது என்ற முடிவில் சென்று இருந்தேன். அந்தக்கோயில் ஒரு பெரிய குன்றில் மேல் இருக்கிறது. மேலேறிச் சென்றால் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இலவசத் தரிசனம்,  ரூ100, 300 கட்டணத் தரிசனம் என்ற வகைபாட்டில் உள்ளேச் செல்ல ஏற்பாடுகள் இருந்தன.
மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. குன்றின் மேல் கோபுரம், பிரகாரம் என்று இன்றைய கோயில்கள் அமைப்பில் கட்டப்பட்டு இருந்தாலும் அது குகைக்கோயிலாகத் தான் இருக்கிறது. புதியதாக கட்டப்பட்டு நெறிப்படுத்தியிக்கும் வரிசையில் காத்திருந்து போகும் நீண்ட பாதை, கம்பி அடைப்புகளாய் பிரகாரங்களைச் சுற்றிச் செல்லுகிறது. குகை வாயிலை ஒட்டிய பிரகாரத்தில் அவ்வப்போது ஆடுகளையும் மாடுகளையும் குறிப்பாக எருமைமாடுகளைக் காவுகொடுக்கும் சடங்கு நடத்தப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
குகைக்குள் இறங்கும் பாதை குறுகலாக இருக்கிறது. கொஞ்சம் விசாலமான இடத்தில் மொழுமொழுப்பான பெரிய கல் இருக்கிறது. அதன் மேல் ஏராளமாக சிவப்பு நிறப் பூக்களைக் குவித்திருந்தார்கள். அந்த பெரியகல்லின் மீது சிவலிங்கமும் அதன் பக்கவாட்டுகளில் ஆண்பெண் கலவி உருவங்களும் வடிக்கப்பட்டு இருக்கிறதாம்.  இவற்றை நேரிட்டு பார்க்க முடியாதவாறு மலர்களைக் கொண்டு போர்த்தி வைத்திருக்கிறார்கள். அதனை தொட்டு வணங்க பலிபீடத்தின் மீது நூறுரூபாய்க்கு மேல் வைத்தால் அனுமதிக்கிறார்கள்.
வைதீககர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது குகை. மினுக்குக்கென்று எரியவிட்டு இருக்கும் மின்விளக்கு ஒளியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். குகை சுவர்களில் ஏராளமாக புடைப்புச்சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஏதோ ஒரு காலத்தில் அந்தச் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சியச் சிற்பங்களை உற்றுப் பார்க்கும் போது கலவிச்  சிற்பங்களாகத் தெரிந்தன.
சறுக்கலானப் பாதையில் இறங்கினால் கொப்பறை வாயில் இருளில் கிடக்கிறது. வாயிலை ஒட்டியது போல சின்னதான மண்டபம் இருக்கிறது. அதன் நடுவில் தான் ‘காமக்யா’ வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. காமக்யா என்பது பெண்குறி. குடைவு மண்டபத்தின் கீழ் உள்ள பாறையில் செதுக்கப்பட்டு இருக்கும் பெண்குறி ஒரு பாகத்திற்குள்  உள்ளடங்கி விடும். பளிங்கு போன்ற வழுவழுப்பான அந்தப் படிமத்தின் மீது குங்குமத்தைக் கொட்டி வைத்திருக்கிறார்கள்.
“…காமக்யா என்ற புகழ் பெற்றக் கோயிலில் உள்ள பெண்தெய்வத்தின் படிமம் யோனியாகும். பெண் பிறப்புறுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இயற்கையின் வளமைக்கு ஆதாரமான பொருள் செழிப்புடன் இணைக்கப்பட்டுள்ளதைக் காணவேண்டும்…” (உலகாயதம் – தேவிபிரசாத்)
கொப்பறை வாயிலில் இறங்கினால் அந்தப் படிமத்தை சுற்றி ஒருநபர் மட்டுமே குனிந்துப் போகக்கூடிய வழி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் வழியே சுற்றிவந்து தான் வணங்குகிறார்கள். காமக்யாவின் அடிப்பகுதியில் இருக்கும் நீர் தாரையில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்ததைப் பார்த்தேன்.  தொல்குடி சமூகபூசாரி ஒருவர் அதன் அருகில் அமர்ந்து வணங்குபவர்கள் காமாக்காவின் நீர்தாரை வெளிப்படும் இடத்தில் மண்டியிட்டு அந்த ‘தாரை’ யின் மீது கை வைத்து தொட்டு வணங்கி அந்த நீரை புனிதநீராக கருதி தலையில் தெளித்துக் கொள்ளவும் சிறிது அருந்தவும் அனுமதிக்கிறார். பெரும்பாலனவர்கள் அந்தப் பூசாரிக்கு நூறுரூபாய்க்கு மேல் காணிக்கைத் தருகிறார்கள்.
இந்தப் பெண்குறி வழிபாடு தொல்குடிச் சமூக விளைச்சல் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இதன் பூர்வாங்க வரலாற்றை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் உலகாயதம் என்ற நூல் வழி  விரிவாக அறியலாம்,  தினம்தினம் ஆயிரக்காணக்கான மக்கள் வந்து வழிபாடு செய்து விட்டுச் சொல்கிறார்கள் என்றும் அறியமுடிகிறது,
ஒவ்வொரு முழுநிலா நாளிலும் காமக்யாவின் நீர்தாரையில் இருந்து மாதவிடாய் ரத்தம் வெளிவருகிறதாம். இந்த ரத்தம் புனிதசெந்தூரம் என்று ஒவ்வொரு துளியையும் ஆயிரக்கானக்கான ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்களாம். குழந்தைப்பேறு எட்டாதவர்கள் நாற்பத்தெட்டு நாள் விரதம் இருந்து காமக்யாவை வணங்கி புனித ரத்தத்தை பெற்று தரிக்கொள்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டி விடுவதாக ஒரு நம்பிக்கை மக்களிடையே இருப்பதாக அறிந்தேன்..  
மக்களிடம் இருக்கும் நம்பிக்கை ஒரு புறம் இருக்கட்டும். இது வைதீகத்தின் சூதடி என்று உறுதியாக சொல்ல முடியும். காமக்யாவில் இருந்து புனித ரத்தம் எதுவும் வெளிப்பட வாய்பே இல்லை. நான் முதலில் குறிப்பிட்டுள்ளபடி தினம்தினம் நூற்றுக்கணக்கான கால்நடைகள் காவு கொடுக்கப்படுகிறது.
இந்தக் கால்நடைகளை மக்கள் தங்கள் கால்நடை பெருகி வாழ்வு தர வேண்டி செலுத்தும் காணிக்கையே. இந்த கால்நடைகளையே பலியிடுகிறார்கள். அப்போது சிந்தும் அந்த ரத்தத்தைக் குளிர்பதனத்தில் வைத்து கெட்டுவிடாமல் பாதுகாப்புச் செய்து அதனை குறிப்பிட்ட நாளில் காமக்யாவின் நீர்தாரைக்கு செலுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பது தான் உண்மையாக இருக்க முடியும்.
இந்த காமக்யா வழிபாடு தொல்குடி சமூகம், வாழ்க்கையைத் தொடங்கிய இடமெல்லாம் இருந்திருக்க வேண்டும். இதன் அடுத்தக்கட்ட வளர்ச்சி தான் சிவலிங்க வழிபாடாக வந்திருக்க முடியும். காமக்யா வழிபாட்டின் எச்சமாக இன்றும் சான்றாக  அசாம் மாநிலம் கௌகாத்தியில் இருப்பதைப் பார்க்க முடிகிறது..
அசாம் மாநிலம் ஹெகாத்தியில்  சாகித்ய அகாடமி நடத்திய இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட மகிழ்ச்சியை விட காமக்யா கோயிலுக்குப்போய் பார்த்து வந்தது தான் என் மனதைவிட்டு நீங்காமல் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘தமிழ்மண்ணில் திருமணம்’ என்ற ஆய்வுக் கட்டுரை எழுதும் போது தொல்குடி சமூகம்  பெண்குறியை வழிபாடு நடத்துவதை கொண்டிருக்கும். அதற்கு சான்றாதாரத்தை காண வேண்டும் என்ற அவா மனதில் எழுந்திருந்தது. அந்த ஆசையை இந்தப் பயணம் நிறைவேற்றியிருக்கிறது.

  







Friday 23 January 2015

தமிழ் மண்ணில் திருமணம் - முன்னுரை

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்இந்த மக்கள் வழக்காறு, என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.  இதனை எளிதில் புறம் தள்ளிட முடியவில்லை.  இது,  ஆணும் பெண்ணும் நடத்திக் கொள்ளும் திருமணத்தைக் குறித்துச் சொல்லப்பட்டு இருப்பதாக என்னால் நம்ப முடியவில்லை. திருமணம் என்னும் பண்பாட்டு வாழ்வியலின்  தொடக்கம் குறித்தும், அதன் வளர்ச்சி, பலம் குறித்தும் தான் சொல்லப்பட்டு இருப்பதாக எனக்குத் தோன்றியது. இதுவே எனக்கு முதல் படிப்பினையாக அமைந்து போனது.
                திருமணம் செய்ய  வரன் தேடிப் போவோர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அது போன்ற அனுபவம் உங்களுக்கு எப்படி வரும்? நீங்கள் எந்த உறவுமுறையை நெருக்கமாக வைத்திருக்கிறீர்கள்?” என் இளமைப் பருவம் முதல் இன்று வரை நட்பை சீராகக் கொண்டிருக்கும் நண்பர் இரா. ராஜகுமார் பேச்சு வாக்கில் கேட்டு விட்டார்.  எனக்கு கோபம் மூக்கில் வந்து இறங்கியது, என்னவோ உண்மை தான். இருந்தாலும், அவர் எழுப்பிய வினாவுக்கு விடை சொல்ல வழியில்லை. அப்போதைக்குக் கமுக்கமாகவே இருந்தேன்.
                அவர், வினா எழுப்பியதோடு நிறுத்தி விடவில்லை. “பெண் எடுப்பதும் கொடுப்பதும், நீங்க நினைத்துக் கொண்டு இருப்பது போல கிள்ளுக்கீரை இல்லை. பணத்தை எடுத்துக் கொண்டு போய்  புத்தகம் வாங்கி வருவது போலும் இல்லை என்பதை  இனி மேல், உங்களுக்கு அனுபவம் கற்றுக் கொடுத்தால் தான் பதத்துக்கு வருவீர்கள்என்று விருத்தியுரை சொல்லும் போதும் என்னால் வாய் திறக்க முடியவில்லை.
                அந்தக் காலத்தில பொண்ணு பாக்கப் பொறப்பட்டுட்டா  ரெண்டு சோடு தேய்ஞ்சி போயிடும்என்று என் தாத்தா சொல்லியது என் மனசில் வந்து நின்றது.
                சற்றைக்கெல்லாம், `இது பொதுப்புத்தியில் உள்ளவையாயிற்றே? நிலவுடைமைச் சமூக சிந்தனை அல்லவா இது?‘ என என் அறிவு மனம் விழித்துக் கொண்டு உணர்த்திற்று. இவர்  நிலவு டைமைச்  சமூகத்தின் ஒரு பிரதியாய் இருப்பவர்.  இவரிடம் பேசுவது கல்லில் நார் உரிப்பது போலத்தான். ஆனால், அதே நேரம் அவர் என் மீது  அலாதியான நட்பைக் கொண்டிருப்பவர். நான் இவரிடம் இது குறித்துப் பேசிட அப்போதைக்கு விருப்பம் கொள்ள வில்லை.
`அம்மா! அப்பா!’ என்று அழைக்கத் தொடங்கின காலத்தில் இருந்து அவர்கள் எருப்போட்டு வளர்த்து விட்ட சிந்தனையல்லவா அது? என் அறிவுத் தேடல், அதனைக் கவாத்து செய்து வைத்திருக்கிறதே தவிர, முற்றிலும் வேரோடு கெல்லி எறிந்து விட முடியவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
                எனக்குத் திருமணம் செய்து விடவேண்டும் என்று என்னை வளர்த்த சின்னம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டார்கள். `அது, அவர்கள் கடமை தானே? செய்யட்டும்என்று இருந்தேன்.
ஒரு நாள், `இவள் தான் உனக்கு வாக்கப்படப் போகிறவள். உன் அப்பாவின் உறவுக்காரி. அந்த உறவு விட்டுப் போய் விடக்கூடாதுன்னு பேசி முடித்துக்கொண்டு வந்து விட்டார்என்று சொல்லிச் சின்னதான கருப்பு வெள்ளைப் படத்தைக் காட்டினார்.
உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரி தான்என்று அந்தப் படத்தைக் கூடப் பார்க்காமல் என் முடிவைச் சொன்னதும் நான் அவர்களை, கௌரவப்படுத்தச் சொல்லுவதாகப் புரிந்து கொண்டார்கள். ஓரிரு நாளில் `திருமண உறுதிசெய்து எழுதிக் ( பாக்கு மாற்றி ) கொண்டு வந்து விட்டார்கள்.
என் அப்பாவின், விருப்பத்தை மறுத்துப் பேசும் தைரியத்தை அவர்கள் எனக்கு கொடுத்து வளர்க்கவில்லை என்பது தான் உண்மை.  `திருமணத்தை நான் விரும்பிடும் முறையில் நடத்திக் கொள்ள வேண்டும்என்ற உறுதிப்பாட்டில் மட்டும் இருந்தேன். என் அப்பாவிடம் அதனை, நேரில் பேசவும் அச்சம் கொண்டு இருந்தேன்.
`திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதுஎன்பதை முழுமையாக நம்பிக் கெண்டிருக்கும் என் அப்பாவின் மனசு உள்பட இந்தச் சமூகம் கரடு தட்டிக் கிடக்கிறது. இதன் மீது  ஒரு சிறு கீறலைக் கூடச் செய்து விட முடியாது என்று அது நாள் வரையிலும் என்னளவில் ஒதுங்கி இருந்து வாழக் கற்றுக் கொண்டு விட்டேன். 
`சாதிச்சனமே சாதித்துக் காட்டும். அதனை மீறி நடந்து விட்டால் ஒரு நாதி கூட வந்து எட்டிப் பார்க்காதுஎன்ற உறுதியான நம்பிக்கையோடு சாதிச்சமூக உறவு முறைகளோடு நெருக்கமாக இருந்தவர்கள் என் அம்மாவும் அப்பாவும். அக்கருதுகோள் என் மனதில் என்றைக்கும் சுத்தமாய் இருந்ததில்லை. என் மனதில் உறுதியாக இருந்தது , திராவிட இயக்கத் தத்துவம் ஒன்று மட்டும் தான்.
நான் திராவிட இயக்கப் பற்றாளனாக இருந்தாலும், அவர்கள் வழி நடத்திச் செய்து வைக்கும் திருமணச் சடங்குகளின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை.
                `என் அம்மாவும் அப்பாவும், `மலர் மாலையையும், தாலியையும்எடுத்துக் கொடுக்கத் தான் நான், திருமணம் செய்து கொள்ள வேண்டும்என்பதே என் விருப்பமாக இருந்தது.  இதை என் அப்பாவிடம் நேரில் சொல்லவும் அச்சமாக இருந்தது. காரணம், என் அப்பா வைதிகத்தின் மீது நம்பிக்கை உள்ள தீவிர சிவபக்தர். ஆனால், அவர் வழிபாட்டை நடத்தும் விதத்தில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இருக்காது.
அன்றாடங்காய்ச்சியாய் வாழ்ந்தவர், விடியலுக்கு முன்பே எழுந்து,  சிவன் கோயில் குளத்தில் நீராடி, வரும்போதே குளக்கரையில் உள்ள மலர்கள் சிலவற்றைப் பறித்து வந்து விடுவார். திருநீறைத் தரித்துக் கொண்டு பறித்து வந்த மலர்களை, சாமி மாடத்தில் வைத்து வணங்கி, சிவமந்திரங்களைச் சொல்லிக் கொள்வார்.
சூரியன் எழும்பும் போது அதன் முன் நின்று வழிபாடு நடத்துவார். இப்படியான பண்புகளைக் கொண்டவரிடம் என் தத்துவம் வேகாது. என்  மனம் எச்சரிக்கைச் செய்தது. இந்த எச்சரிக்கையை எதிராடுவது   போல   என்னுடைய  தாய்மாமா சம்பந்தம்பிள்ளை, என் மனதில் உட்கார்ந்திருந்தார்.
அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் போராளியாக இருந்தவர். மணலி கந்தசாமி, .கே.சுப்பையா போன்றவர்களுடன் உடன் நின்று களப்பணி ஆற்றியவர்.   பல முறை போராட்டங்களில் கலந்து கொண்டு  முறையாகக் கைது செய்யப்பட்டவர். அவர் சிறைப்பட்ட நாட்களைத் தொகுத்துப் பார்த்தால் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நாட்கள் கூடி நிற்கும்.  நான்கு முறை ஊராட்சி மன்றத்தலைவராக இருந்தார். நான்காவது முறை ஒருவர் பொறுப்புக்கு வரக்கூடாது என்ற தடையைக் கொண்டிருந்தது அந்தக் கட்சி. இருந்தாலும் அந்த தடையைத் தளர்த்தி நான்காவது முறை ஊராட்சி மன்றத் தலைவர் ஆனார். அந்த அளவுக்கு, கட்சியிடமும்  மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தவர்.  என்னைப் புரிந்து கொண்டிருந்தவர்.
அப்படியானவருக்கு , அவர் நினைத்தபடி திருமணத்தை நடத்திக் கொள்ள குடும்பத்தினர் தடையாக இருந்திருக்கிறார்கள். அவர் தம்பிகளுக்குத் திருமணத்தை நடத்திய பின்னர் தான், அவர் விரும்பியபடி வைதிக மறுப்புத் திருமணத்தை நடத்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறார்கள்.
அந்த மாமாவை வைத்து நான் மணம் கொள்ளும் முறையைப் பற்றி என் அப்பாவிடம் பேசி முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதற்குள் ஒரு சின்னக்காயை நகர்த்திப் பார்க்க விரும்பினேன். அதற்குப் பொருத்தமானவர் என் நண்பர் ராஜகுமாரே என்று முடிவு செய்தேன். காரணம், அவர் மீது என் அப்பாவுக்கு நம்பிக்கை உண்டு.
அவரைக்  கொண்டே   நான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் முறை பற்றிப்   பேசச் சொன்னோன். அவரும் பேசலாம் என்று என் அப்பாவிடம் பேச்சைத் தொடங்கி இருக்கிறார்.
 படரும் கொடியை நான் கை நீட்டி மடக்கிடக் கூடாது.  என் குடும்பத்திலேயே தத்திஉத்தி முதல் ஆளா வாத்தியாரா வந்திருக்கான். `சிவஅருள்அப்படித்தான் இருக்குன்னா அதில நான் தலையிட மாட்டேன். அவன் விருப்பப்படியே நடத்திக்கிட்டும். ஆனா, குடும்ப கௌரவம் ஒன்னு இருக்குன்னு சொல்லிடுங்க....”
 தேசிய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டு செல்வாக்கு பெற்று பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்த,  என் அப்பாவுக்கு அண்ணன் உறவு முறையில் இருந்த,  வே. சாம்பசிவம்பிள்ளை அவர்களை முன் நிறுத்தி  நடத்திக் கொள்ளலாம் என்று அப்பா தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார்.
என் நண்பரை விட்டே மீண்டும் ஒரு முறை என் விருப்பத்தைப் பேசச் செய்தேன். அவர் மசியவில்லை.
“...நான் முன்னின்று என் மகனின் திருமணத்தை நடத்துவதும் அந்த அண்ணார் நடத்துவதும் என்அளவில் ஒன்று தான். அவர் நடத்தி வைப்பதால் சம்பந்தி வீட்டாரும் குறுக்கே  நிற்க மாட்டார்கள்என்று பச்சைக்கொடிக் காட்டினார். என் அப்பாவின் விருப்பப்படியே அவரை முன் வைத்தே, `எனக்கும் பத்மாவதிக்கும் திருமணம்இனிதே நடந்தேறியது.
என் அப்பா, எங்கள் திருமணத்திற்கு, சாத்திரம் சம்பிரதாயத்தோடு, சோதிடப் பொருத்தம் பார்த்தார்களா? இல்லையா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்கள் சமூகத்தில் உறவுக்குள் கொடுத்து எடுத்தால் சம்பிரதாயம் எல்லாம் பார்ப்பது கிடையாது என்று மட்டும் அறிந்திருக்கிறேன்.
திருமணம் ஆன பின்னர் துணைவியாரின் உறவுகளோடு, என்னால் நெருக்கம் கொண்டு இருக்க முடியவில்லை. என் மனம் அவர்களோடு ஒண்டி நிற்க ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் பண்பாடு வேறு ஒன்றாக இருந்தது.
திருமண நாளில் என் மனைவியின் குடும்பத்தார், சிலரை அழைத்து வந்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்கள் மனிதப் பண்பு அற்றவர்கள். கிட்டத்தட்ட பெரும் பண்ணையார்களின் மனதையும் செயலையும் ஒத்து வாழ்பவர்கள். அவர்களை  மனிதனாக ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை.
எங்கள் இருவரின் அம்மா அப்பா ஆகியோரிடம் மட்டுமே வணங்கி ஆசி பெற விரும்புகிறேன். மற்றவர்களின் காலில் விழ முடியாதுஎன்று எடுத்தெறிந்து பேசி பிடிவாதம் பிடித்து விட்டேன். அவர்கள் பல வழிகளில் பேசிப் பார்த்தார்கள். நான் மசிய வில்லை.
என் பிடிவாதம் அவர்கள் மனதை உருக்காக மாற்றி விட்டது. அவர்களால் என்னை அடிபணிய வைக்க முடியவில்லை. கொஞ்ச நாள் கழித்து, “உங்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் தான் அதனால் தான் நீங்கள் இப்படி பிடிவாதக்காரராக இருக்கிறீர்கள்என்று என் மனைவி சொன்னாள். `அது என்னா ஏழாம் பொருத்தம்?’ அதன் பொருளை, இன்றைய நாள் வரையிலும் நான் என் மனைவி யிடம் கேட்டு அறிந்து கொள்ளவில்லை. அப்படியான விருப்பமும் எனக்கு எழவில்லை. இன்றைய நாளில் என் மைத்துனர் ஒருவர் மட்டும் ஓரளவுக்கு என்னைப் புரிந்து கொண்டு நட்புடன் இருக்கிறார்.
`பழந்தமிழர் வாழ்வும், அவர்கள் பண்பாடும் உன்னதமானவைஎன்று திராவிட இயக்கத்தவர்கள் அக்காலங்களில் பரப்பியிருந்தார்கள். சங்க இலக்கியங்களோடு, காப்பியங்களையும் காட்டி என்னைப் போன்றவர்களை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் வாய்ஜாலம் மயக்கிப் போட்டு இருந்தது, என்னவோ உண்மை தான். அவர்கள் விதந்தோதிய சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, அகநானூறு போன்ற நூல்களுக்கு புலியூர் கேசிகன் எழுதிய உரைகளைப் படித்து விட்டு, கனவில் மிதந்து கிடந்தவர்களில் நானும் ஒருவனாகத் தான் கிடந்தேன்.
காலம்,  வரலாற்று இயங்கியலின் போக்கைச்  சுட்டிக் காட்டியது. அது தொடர்பான புரிதலும் என் மனதுக்குள் விரியத் தொடங்கின. இடைக்காலத் தமிழர் வாழ்வும் பண்பாடும், இக்காலத் தமிழர் வாழ்வும் பண்பாடும் எந்த வகையைச் சார்ந்தன? என்ற வினா என்னை கிளிக்காட்டம் காட்டிக் கொண்டிருந்தது.
என் நண்பர் கேட்ட கேள்விக்கு விடை காணும் திசையில் பயணித்தேன். அனுபவப்பட்டவர்களின் வழிகாட்டலும், சுய அனுபவத்தோடு கூடிய வாசிப்பும், விசாலப்படுத்திய களமும், என்னை முன்நோக்கி அழைத்துச் சென்றன.
                `திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்என்பதற்கான சான்றாதாரங்களைத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், உலகாயதமும், தொல் சமூகத்  தாந்திரிக வரலாறும் தொட்டுக் காட்டின. அவற்றின் கைப்பற்றலோடு என் மனதில், திருமணப் பண்பாட்டின் வரலாற்று இழையை அறிமுகப்படுத்தின. அதன் வலை, விரிந்து விரிந்து போக என் மனதையும் விரித்து  கொண்டே சென்றது.
அதன் விளைச்சலே, `தமிழ் மண்ணில் திருமணம்என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொடர். அது வரலாற்றுக் கணக்கைத் தொடங்கியது. கணக்கைப் போடும் போது, தப்பும் தவறும் வரத்தான் செய்தன. அவற்றினைத் திருத்திக்கொள்ள ஆய்வாளர், தோழர் சி.அறிவுறுவோன் அவர்கள் வழக்கம் போல் செய்த வழிகாட்டல் மிகுந்த பயன் அளித்தது.
இந்தத் தொடர் கட்டுரைக்காக, நான் படித்த நூல்கள் பெரிதும் உதவின. அதே நேரத்தில் சிலவிடங்களில் இக்கட்டுரையில் விடுபடல் இருப்பதாகவும், வரலாற்று இயங்கியலுக்கு ஒவ்வாததாக இருப்பதாகவும் அவை எனக்கு உணர்த்தின. மிகவும் நுட்பமாக என்னை அணுகிடச் செய்தன. பலவிடங்களில் அவ்வாய்வு நூல்களில் இருந்து, நீண்ட மேற்கோள்களையும், கருதுகோள்களையும் அந்நூல்களில் உள்ளபடியே எடுத்துக் காட்டியுள்ளேன்.  என் மனம் எழுப்பியனவற்றையும் சுட்டியிருக்கிறேன்.
 அந்தந்த இடங்களிலேயே அடிக்குறிப்பு இட்டு இருப்பதால், அந்த நூல்களின் தனிப்பட்டியலை இணைக்கவில்லை. அந்தந்த மூல நூலாசிரியர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எடுத்துக்காட்டல்கள் வாத, பிரதிவாதங்களுக்கு உட்பட்டே இருக்கின்றன. அறியாமையை வெளிப்படுத்தி இருப்பேனானால் எதிர்காலத்தில் ஒழுங்குப்படுத்திக் கொள்ள எந்த நேரமும் ஆயத்தமாக இருக்கிறேன்.