Friday, 23 January 2015

தமிழ் மண்ணில் திருமணம் - முன்னுரை

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்இந்த மக்கள் வழக்காறு, என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.  இதனை எளிதில் புறம் தள்ளிட முடியவில்லை.  இது,  ஆணும் பெண்ணும் நடத்திக் கொள்ளும் திருமணத்தைக் குறித்துச் சொல்லப்பட்டு இருப்பதாக என்னால் நம்ப முடியவில்லை. திருமணம் என்னும் பண்பாட்டு வாழ்வியலின்  தொடக்கம் குறித்தும், அதன் வளர்ச்சி, பலம் குறித்தும் தான் சொல்லப்பட்டு இருப்பதாக எனக்குத் தோன்றியது. இதுவே எனக்கு முதல் படிப்பினையாக அமைந்து போனது.
                திருமணம் செய்ய  வரன் தேடிப் போவோர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அது போன்ற அனுபவம் உங்களுக்கு எப்படி வரும்? நீங்கள் எந்த உறவுமுறையை நெருக்கமாக வைத்திருக்கிறீர்கள்?” என் இளமைப் பருவம் முதல் இன்று வரை நட்பை சீராகக் கொண்டிருக்கும் நண்பர் இரா. ராஜகுமார் பேச்சு வாக்கில் கேட்டு விட்டார்.  எனக்கு கோபம் மூக்கில் வந்து இறங்கியது, என்னவோ உண்மை தான். இருந்தாலும், அவர் எழுப்பிய வினாவுக்கு விடை சொல்ல வழியில்லை. அப்போதைக்குக் கமுக்கமாகவே இருந்தேன்.
                அவர், வினா எழுப்பியதோடு நிறுத்தி விடவில்லை. “பெண் எடுப்பதும் கொடுப்பதும், நீங்க நினைத்துக் கொண்டு இருப்பது போல கிள்ளுக்கீரை இல்லை. பணத்தை எடுத்துக் கொண்டு போய்  புத்தகம் வாங்கி வருவது போலும் இல்லை என்பதை  இனி மேல், உங்களுக்கு அனுபவம் கற்றுக் கொடுத்தால் தான் பதத்துக்கு வருவீர்கள்என்று விருத்தியுரை சொல்லும் போதும் என்னால் வாய் திறக்க முடியவில்லை.
                அந்தக் காலத்தில பொண்ணு பாக்கப் பொறப்பட்டுட்டா  ரெண்டு சோடு தேய்ஞ்சி போயிடும்என்று என் தாத்தா சொல்லியது என் மனசில் வந்து நின்றது.
                சற்றைக்கெல்லாம், `இது பொதுப்புத்தியில் உள்ளவையாயிற்றே? நிலவுடைமைச் சமூக சிந்தனை அல்லவா இது?‘ என என் அறிவு மனம் விழித்துக் கொண்டு உணர்த்திற்று. இவர்  நிலவு டைமைச்  சமூகத்தின் ஒரு பிரதியாய் இருப்பவர்.  இவரிடம் பேசுவது கல்லில் நார் உரிப்பது போலத்தான். ஆனால், அதே நேரம் அவர் என் மீது  அலாதியான நட்பைக் கொண்டிருப்பவர். நான் இவரிடம் இது குறித்துப் பேசிட அப்போதைக்கு விருப்பம் கொள்ள வில்லை.
`அம்மா! அப்பா!’ என்று அழைக்கத் தொடங்கின காலத்தில் இருந்து அவர்கள் எருப்போட்டு வளர்த்து விட்ட சிந்தனையல்லவா அது? என் அறிவுத் தேடல், அதனைக் கவாத்து செய்து வைத்திருக்கிறதே தவிர, முற்றிலும் வேரோடு கெல்லி எறிந்து விட முடியவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
                எனக்குத் திருமணம் செய்து விடவேண்டும் என்று என்னை வளர்த்த சின்னம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டார்கள். `அது, அவர்கள் கடமை தானே? செய்யட்டும்என்று இருந்தேன்.
ஒரு நாள், `இவள் தான் உனக்கு வாக்கப்படப் போகிறவள். உன் அப்பாவின் உறவுக்காரி. அந்த உறவு விட்டுப் போய் விடக்கூடாதுன்னு பேசி முடித்துக்கொண்டு வந்து விட்டார்என்று சொல்லிச் சின்னதான கருப்பு வெள்ளைப் படத்தைக் காட்டினார்.
உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரி தான்என்று அந்தப் படத்தைக் கூடப் பார்க்காமல் என் முடிவைச் சொன்னதும் நான் அவர்களை, கௌரவப்படுத்தச் சொல்லுவதாகப் புரிந்து கொண்டார்கள். ஓரிரு நாளில் `திருமண உறுதிசெய்து எழுதிக் ( பாக்கு மாற்றி ) கொண்டு வந்து விட்டார்கள்.
என் அப்பாவின், விருப்பத்தை மறுத்துப் பேசும் தைரியத்தை அவர்கள் எனக்கு கொடுத்து வளர்க்கவில்லை என்பது தான் உண்மை.  `திருமணத்தை நான் விரும்பிடும் முறையில் நடத்திக் கொள்ள வேண்டும்என்ற உறுதிப்பாட்டில் மட்டும் இருந்தேன். என் அப்பாவிடம் அதனை, நேரில் பேசவும் அச்சம் கொண்டு இருந்தேன்.
`திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதுஎன்பதை முழுமையாக நம்பிக் கெண்டிருக்கும் என் அப்பாவின் மனசு உள்பட இந்தச் சமூகம் கரடு தட்டிக் கிடக்கிறது. இதன் மீது  ஒரு சிறு கீறலைக் கூடச் செய்து விட முடியாது என்று அது நாள் வரையிலும் என்னளவில் ஒதுங்கி இருந்து வாழக் கற்றுக் கொண்டு விட்டேன். 
`சாதிச்சனமே சாதித்துக் காட்டும். அதனை மீறி நடந்து விட்டால் ஒரு நாதி கூட வந்து எட்டிப் பார்க்காதுஎன்ற உறுதியான நம்பிக்கையோடு சாதிச்சமூக உறவு முறைகளோடு நெருக்கமாக இருந்தவர்கள் என் அம்மாவும் அப்பாவும். அக்கருதுகோள் என் மனதில் என்றைக்கும் சுத்தமாய் இருந்ததில்லை. என் மனதில் உறுதியாக இருந்தது , திராவிட இயக்கத் தத்துவம் ஒன்று மட்டும் தான்.
நான் திராவிட இயக்கப் பற்றாளனாக இருந்தாலும், அவர்கள் வழி நடத்திச் செய்து வைக்கும் திருமணச் சடங்குகளின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட வில்லை.
                `என் அம்மாவும் அப்பாவும், `மலர் மாலையையும், தாலியையும்எடுத்துக் கொடுக்கத் தான் நான், திருமணம் செய்து கொள்ள வேண்டும்என்பதே என் விருப்பமாக இருந்தது.  இதை என் அப்பாவிடம் நேரில் சொல்லவும் அச்சமாக இருந்தது. காரணம், என் அப்பா வைதிகத்தின் மீது நம்பிக்கை உள்ள தீவிர சிவபக்தர். ஆனால், அவர் வழிபாட்டை நடத்தும் விதத்தில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இருக்காது.
அன்றாடங்காய்ச்சியாய் வாழ்ந்தவர், விடியலுக்கு முன்பே எழுந்து,  சிவன் கோயில் குளத்தில் நீராடி, வரும்போதே குளக்கரையில் உள்ள மலர்கள் சிலவற்றைப் பறித்து வந்து விடுவார். திருநீறைத் தரித்துக் கொண்டு பறித்து வந்த மலர்களை, சாமி மாடத்தில் வைத்து வணங்கி, சிவமந்திரங்களைச் சொல்லிக் கொள்வார்.
சூரியன் எழும்பும் போது அதன் முன் நின்று வழிபாடு நடத்துவார். இப்படியான பண்புகளைக் கொண்டவரிடம் என் தத்துவம் வேகாது. என்  மனம் எச்சரிக்கைச் செய்தது. இந்த எச்சரிக்கையை எதிராடுவது   போல   என்னுடைய  தாய்மாமா சம்பந்தம்பிள்ளை, என் மனதில் உட்கார்ந்திருந்தார்.
அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் போராளியாக இருந்தவர். மணலி கந்தசாமி, .கே.சுப்பையா போன்றவர்களுடன் உடன் நின்று களப்பணி ஆற்றியவர்.   பல முறை போராட்டங்களில் கலந்து கொண்டு  முறையாகக் கைது செய்யப்பட்டவர். அவர் சிறைப்பட்ட நாட்களைத் தொகுத்துப் பார்த்தால் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நாட்கள் கூடி நிற்கும்.  நான்கு முறை ஊராட்சி மன்றத்தலைவராக இருந்தார். நான்காவது முறை ஒருவர் பொறுப்புக்கு வரக்கூடாது என்ற தடையைக் கொண்டிருந்தது அந்தக் கட்சி. இருந்தாலும் அந்த தடையைத் தளர்த்தி நான்காவது முறை ஊராட்சி மன்றத் தலைவர் ஆனார். அந்த அளவுக்கு, கட்சியிடமும்  மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தவர்.  என்னைப் புரிந்து கொண்டிருந்தவர்.
அப்படியானவருக்கு , அவர் நினைத்தபடி திருமணத்தை நடத்திக் கொள்ள குடும்பத்தினர் தடையாக இருந்திருக்கிறார்கள். அவர் தம்பிகளுக்குத் திருமணத்தை நடத்திய பின்னர் தான், அவர் விரும்பியபடி வைதிக மறுப்புத் திருமணத்தை நடத்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறார்கள்.
அந்த மாமாவை வைத்து நான் மணம் கொள்ளும் முறையைப் பற்றி என் அப்பாவிடம் பேசி முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதற்குள் ஒரு சின்னக்காயை நகர்த்திப் பார்க்க விரும்பினேன். அதற்குப் பொருத்தமானவர் என் நண்பர் ராஜகுமாரே என்று முடிவு செய்தேன். காரணம், அவர் மீது என் அப்பாவுக்கு நம்பிக்கை உண்டு.
அவரைக்  கொண்டே   நான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் முறை பற்றிப்   பேசச் சொன்னோன். அவரும் பேசலாம் என்று என் அப்பாவிடம் பேச்சைத் தொடங்கி இருக்கிறார்.
 படரும் கொடியை நான் கை நீட்டி மடக்கிடக் கூடாது.  என் குடும்பத்திலேயே தத்திஉத்தி முதல் ஆளா வாத்தியாரா வந்திருக்கான். `சிவஅருள்அப்படித்தான் இருக்குன்னா அதில நான் தலையிட மாட்டேன். அவன் விருப்பப்படியே நடத்திக்கிட்டும். ஆனா, குடும்ப கௌரவம் ஒன்னு இருக்குன்னு சொல்லிடுங்க....”
 தேசிய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டு செல்வாக்கு பெற்று பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்த,  என் அப்பாவுக்கு அண்ணன் உறவு முறையில் இருந்த,  வே. சாம்பசிவம்பிள்ளை அவர்களை முன் நிறுத்தி  நடத்திக் கொள்ளலாம் என்று அப்பா தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார்.
என் நண்பரை விட்டே மீண்டும் ஒரு முறை என் விருப்பத்தைப் பேசச் செய்தேன். அவர் மசியவில்லை.
“...நான் முன்னின்று என் மகனின் திருமணத்தை நடத்துவதும் அந்த அண்ணார் நடத்துவதும் என்அளவில் ஒன்று தான். அவர் நடத்தி வைப்பதால் சம்பந்தி வீட்டாரும் குறுக்கே  நிற்க மாட்டார்கள்என்று பச்சைக்கொடிக் காட்டினார். என் அப்பாவின் விருப்பப்படியே அவரை முன் வைத்தே, `எனக்கும் பத்மாவதிக்கும் திருமணம்இனிதே நடந்தேறியது.
என் அப்பா, எங்கள் திருமணத்திற்கு, சாத்திரம் சம்பிரதாயத்தோடு, சோதிடப் பொருத்தம் பார்த்தார்களா? இல்லையா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்கள் சமூகத்தில் உறவுக்குள் கொடுத்து எடுத்தால் சம்பிரதாயம் எல்லாம் பார்ப்பது கிடையாது என்று மட்டும் அறிந்திருக்கிறேன்.
திருமணம் ஆன பின்னர் துணைவியாரின் உறவுகளோடு, என்னால் நெருக்கம் கொண்டு இருக்க முடியவில்லை. என் மனம் அவர்களோடு ஒண்டி நிற்க ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் பண்பாடு வேறு ஒன்றாக இருந்தது.
திருமண நாளில் என் மனைவியின் குடும்பத்தார், சிலரை அழைத்து வந்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்கள் மனிதப் பண்பு அற்றவர்கள். கிட்டத்தட்ட பெரும் பண்ணையார்களின் மனதையும் செயலையும் ஒத்து வாழ்பவர்கள். அவர்களை  மனிதனாக ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை.
எங்கள் இருவரின் அம்மா அப்பா ஆகியோரிடம் மட்டுமே வணங்கி ஆசி பெற விரும்புகிறேன். மற்றவர்களின் காலில் விழ முடியாதுஎன்று எடுத்தெறிந்து பேசி பிடிவாதம் பிடித்து விட்டேன். அவர்கள் பல வழிகளில் பேசிப் பார்த்தார்கள். நான் மசிய வில்லை.
என் பிடிவாதம் அவர்கள் மனதை உருக்காக மாற்றி விட்டது. அவர்களால் என்னை அடிபணிய வைக்க முடியவில்லை. கொஞ்ச நாள் கழித்து, “உங்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் தான் அதனால் தான் நீங்கள் இப்படி பிடிவாதக்காரராக இருக்கிறீர்கள்என்று என் மனைவி சொன்னாள். `அது என்னா ஏழாம் பொருத்தம்?’ அதன் பொருளை, இன்றைய நாள் வரையிலும் நான் என் மனைவி யிடம் கேட்டு அறிந்து கொள்ளவில்லை. அப்படியான விருப்பமும் எனக்கு எழவில்லை. இன்றைய நாளில் என் மைத்துனர் ஒருவர் மட்டும் ஓரளவுக்கு என்னைப் புரிந்து கொண்டு நட்புடன் இருக்கிறார்.
`பழந்தமிழர் வாழ்வும், அவர்கள் பண்பாடும் உன்னதமானவைஎன்று திராவிட இயக்கத்தவர்கள் அக்காலங்களில் பரப்பியிருந்தார்கள். சங்க இலக்கியங்களோடு, காப்பியங்களையும் காட்டி என்னைப் போன்றவர்களை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் வாய்ஜாலம் மயக்கிப் போட்டு இருந்தது, என்னவோ உண்மை தான். அவர்கள் விதந்தோதிய சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, அகநானூறு போன்ற நூல்களுக்கு புலியூர் கேசிகன் எழுதிய உரைகளைப் படித்து விட்டு, கனவில் மிதந்து கிடந்தவர்களில் நானும் ஒருவனாகத் தான் கிடந்தேன்.
காலம்,  வரலாற்று இயங்கியலின் போக்கைச்  சுட்டிக் காட்டியது. அது தொடர்பான புரிதலும் என் மனதுக்குள் விரியத் தொடங்கின. இடைக்காலத் தமிழர் வாழ்வும் பண்பாடும், இக்காலத் தமிழர் வாழ்வும் பண்பாடும் எந்த வகையைச் சார்ந்தன? என்ற வினா என்னை கிளிக்காட்டம் காட்டிக் கொண்டிருந்தது.
என் நண்பர் கேட்ட கேள்விக்கு விடை காணும் திசையில் பயணித்தேன். அனுபவப்பட்டவர்களின் வழிகாட்டலும், சுய அனுபவத்தோடு கூடிய வாசிப்பும், விசாலப்படுத்திய களமும், என்னை முன்நோக்கி அழைத்துச் சென்றன.
                `திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்என்பதற்கான சான்றாதாரங்களைத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், உலகாயதமும், தொல் சமூகத்  தாந்திரிக வரலாறும் தொட்டுக் காட்டின. அவற்றின் கைப்பற்றலோடு என் மனதில், திருமணப் பண்பாட்டின் வரலாற்று இழையை அறிமுகப்படுத்தின. அதன் வலை, விரிந்து விரிந்து போக என் மனதையும் விரித்து  கொண்டே சென்றது.
அதன் விளைச்சலே, `தமிழ் மண்ணில் திருமணம்என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொடர். அது வரலாற்றுக் கணக்கைத் தொடங்கியது. கணக்கைப் போடும் போது, தப்பும் தவறும் வரத்தான் செய்தன. அவற்றினைத் திருத்திக்கொள்ள ஆய்வாளர், தோழர் சி.அறிவுறுவோன் அவர்கள் வழக்கம் போல் செய்த வழிகாட்டல் மிகுந்த பயன் அளித்தது.
இந்தத் தொடர் கட்டுரைக்காக, நான் படித்த நூல்கள் பெரிதும் உதவின. அதே நேரத்தில் சிலவிடங்களில் இக்கட்டுரையில் விடுபடல் இருப்பதாகவும், வரலாற்று இயங்கியலுக்கு ஒவ்வாததாக இருப்பதாகவும் அவை எனக்கு உணர்த்தின. மிகவும் நுட்பமாக என்னை அணுகிடச் செய்தன. பலவிடங்களில் அவ்வாய்வு நூல்களில் இருந்து, நீண்ட மேற்கோள்களையும், கருதுகோள்களையும் அந்நூல்களில் உள்ளபடியே எடுத்துக் காட்டியுள்ளேன்.  என் மனம் எழுப்பியனவற்றையும் சுட்டியிருக்கிறேன்.
 அந்தந்த இடங்களிலேயே அடிக்குறிப்பு இட்டு இருப்பதால், அந்த நூல்களின் தனிப்பட்டியலை இணைக்கவில்லை. அந்தந்த மூல நூலாசிரியர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எடுத்துக்காட்டல்கள் வாத, பிரதிவாதங்களுக்கு உட்பட்டே இருக்கின்றன. அறியாமையை வெளிப்படுத்தி இருப்பேனானால் எதிர்காலத்தில் ஒழுங்குப்படுத்திக் கொள்ள எந்த நேரமும் ஆயத்தமாக இருக்கிறேன்.