Thursday, 18 September 2014

வாத்தியாரும் நானும்... பள்ளிப்பிராயம்



                கழுதை ஏருக்கு ஒத்து வந்தாலும் வரும் காவனூரான் ஒத்து வரமாட்டான்’ - நான் பிறந்து, உண்டு வளர்ந்த ஊர் மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சீத்துக்கழிப்பா அசலூர்காரவங்கக்கிட்ட வாய்ச்செலவு இன்னிக்கு நிலைச்சி நிக்குது.  இத்தனைக்கும் ஊருக்குள்ள தெக்கால இருக்கிற எழுபதுகளுக்குள்ள அடங்குகிற பறையர் குடிகளும் மீதி இருக்கிய நாலஞ்சி தெருவுக்குள்ள நாப்பது முன்னப்பின்ன வெள்ளாளக்குடிகளும், மூணுசாணார் உறவுமுறைக் குடிகளும் ஊர்க்காவலுக்குன்னே பண்ணை மாகாணம் குடியேச்சி வச்ச ரெண்டு கள்ளர் குடிகளும், எண்ணெச் செட்டியார், நாய்க்கர்ன்னு தலைக்கு ஒரு குடிகளும் கிராமத் தொழிலாளிங்க குடிங்களுமா சேந்து ஒண்ணாடி முன்னாடியா கிடக்குங்க.
                எல்லாக்குடிகளும் திங்கிறதுக்கும் உங்கிறதுக்கும் சின்னதும் பெரிசுமா குடிசை கட்டிக்க பண்ணை மாகாணம் கை காட்டிவிட்டிருக்கும்.  மொத்தத்தில் பண்ணைக்கு எல்லாருமே ஒண்டுக்குடிகதான்.  மொத்தமா பட்டா அடங்கல வச்சிக்கிட்டு இருந்துச்சு.  எல்லாத்தையும் ஏகபோகமா அனுபவிச்சிக்கன்னு ஒருசிவன்கோயிலும் கோயில் குளக்கரையில் இருந்த குருக்கள் இருக்கும் ஒத்தக்கட்டு ஓட்டுவீடும் ஊருக்குள்ள பிரபலம்.  பண்ணைக்கார பெருங்குடி நாலுகட்டு வீட்டுல, பெரிய காங்கிரஸ் கொடியப் பறக்க விட்டுருக்கும்.  பாக்கிறதுக்கு பண்ணையோட கட்டுமானத்தில் தான் தெரியும்.  பறையர் தெருவுக்குள்ள கம்யூனிஸ்ட் காரவங்க வந்து போயிக்கிட்டு பண்ணைக்குக் கீழறுப்பு வேலையைச் செய்யும்போதே மத்த குடிகள் தெருவில் திராவிட கழகத்தோட கொடியை தெம்பா பறக்கவிட்டது.  அண்டை அயலாருங்களும் இல்ல.
                டீக்கடை ராஜாங்கம், மாங்காகணேசன், தங்கையன் இவங்க போதாதா?  இவங்களுக்கு பண்ணைக்கிட்ட கீழ்முள்ளு வைக்கன்னே ரெண்டுமூணு குடிக அப்பஅப்ப முளைச்சிக்கும்.  எந்த புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னு கண்டுக்க முடியாமத்தான் இருங்குங்க.  தேர்தல் வந்தா ஓட்டுப்போடுற காலத்தில் பண்ணைமாகாணம் கிழிக்கிற கோட்டைத் தாண்டித்தான் ஓட்டுவிழும்.  அதைக் கண்டு காணாதுமா பண்ணை இருந்துடும்.  அதுக்கு எப்படியோ கலகம் வந்துடக் கூடாது.  நம்ம குடிபடைங்க நம்மக்கிட்ட ஒண்டுக்குடியாக இருந்தா போதுங்கிற மனசு.  இதைக் குத்திக்காட்டத்தான் அயலூர் பண்ணை மாகாணங்க கிளப்பிவிட்ட வாய்ச்செலவு அது.
                திருவாரூக்கு மேலப்பக்கம் எட்டு மைல் தொலைவில் காட்டாத்துக் கரையில் அறுவது வேலி நஞ்சைபுஞ்சையோட கிடக்கிறதுதான் காவனூர்.  நடுத்தெருவில் ஒண்டுக்குடியா இருந்த கமலாம்பாளுக்கும் சுப்பிரமணிக்கும் அஞ்சாவதா கரிக்கட்டைக்குக் கால் முளைச்சாப்போல பொறந்திருந்தேன்.  அஞ்சாவதா ஆம்புளப்புள்ள பொறந்திருக்கான் பாரு அரசாளுவான்ன்னு பெரிய கனவை மனசுல வைச்சிக்கிட்டு என்னைப் பெத்த அம்மா பீத்திக்கிட்டு சொல்லும்போதுஉனக்கெல்லாம் அதுக்கு பொசுப்பு இல்லடிஅடுத்த குடிசைக்கார பட்டக்கா சொல்லறப்ப அம்மா மூஞ்சி சூம்பித்தான் போயிடும்.
                இருந்தாலும், ‘பொச்சரிப்பு புடுச்சவளுங்க இப்புடித் தான் எடக்குத்து குத்துவாளுங்கன்னு சொல்லிக்கிட்டு என்னை தன் கைக்குள்ளே பொத்திப் பொத்தித்தான் வளர்த்துச்சி.  எனக்குத்தான் கொடுப்பன இல்ல.  அம்மாவுக்கு என்னா நோவுன்னு தெரியாமலேயே ஒரு நாள் அம்மாவை தெக்கே கொண்டுபோய் வச்சிட்டாங்க.  அந்தக் கூலிக்காரவங்களுக்கு சூத்துவச்சி குத்த நேரம் ஏது?  ரெக்கையைக் கட்டிக்கிட்டு நின்னாத்தான் அரைவயிறாவது ரொம்பும்.  இந்த வல்லளவில சவளைதட்டி ஒடுக்கு விழுந்து கிடக்கும் புள்ளைங்களை அப்பன்காரர் கைப்பத்தா பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிக் கிட்டுப்போய் சேத்துவிட்டு பணிக்குப் பண்ணிவிட நேரம் ஏது?
                அம்மாவுக்கு வீடு போபோன்னும் காடு வாவான்னு சொல்லிக்கிட்டு இருக்கிறத புரிஞ்சிக்கிறதுக்குக்கூட திராணி இல்ல.  படிப்புச் சொல்லித் தாறேன்னு புள்ளைங்களைத் தேடிக்கிட்டு திரியிற வாத்தியாரோடஇவனையாச்சும் அனுப்பி வையிங்களேன்அம்மா நச்சரிப்ப தாங்க முடியாம ஒருநாள், ‘வாத்தியாரே! பயலை அழைச்சிக்கிட்டுப்போய் சேத்துக்கங்கைய்யான்னு அப்பா ஒரு காலைப்பொழுதுல பிச்சமுத்து வாத்தியாருகிட்ட என்னைக் காட்டியுட்டார்.  நான் அவரு கையைக் கெட்டியாப் புடுச்சிக்கிட்டேன்.
                உன் பேரு என்னான்னு கேட்டார்.  எனக்கு சந்தோசம் தாங்க முடியல.  ஏன்னா என்னோட பேரைக் கேட்டது வாத்தியாருதான்.  ஊருக்குள்ள கரியன் மொவன் பொரிச்ச முறுக்குன்னு  கூப்புடுவாங்க.  நான் வாத்தியாருக்கிட்டகலியபெருமான்னு சொன்னேன்.  பிச்சைமுத்து வாத்தியாரும் என் ஜாடையாத்தான் இருந்தார்.  என் மூஞ்சை உத்துப் பார்த்தவர், ‘டேய் கலியபெருமா! ஊருக்குள்ள ரொம்ப கலியபெருமாவா இருக்குடா.  உனக்கு அந்தப்பேரு வேணாம்டான்னு சொன்னதும், ‘ஊருக்குள்ள பொரிச்ச முறுக்குன்னு கூப்புடுவாங்க சார், வேணும்னா அதை வைச்சிக் கூப்புடுங்க சார்...’ன்னு சொல்லிட்டு பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு நின்னேன்.  டேய் நீ என்னைவிட வயசுல அழகா இருப்பேடா.  உன் அம்மா வைச்ச பேருல கொஞ்சம் மாத்தி சுந்தரபெருமாள்ன்னு கூப்பிடுறேன்டா,  உன் அப்பாக்கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்கிட்டு நாளைக்கு ரெக்கார்டு சீட்டு எழுதிடுறேன்.  (நான் அறிஞ்ச வரைக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுந்தரபெருமாள் கோயில் ஒரு ஊரோட பேரா மட்டும் தான் இருக்கு)
                நீ எப்பப் பொறந்தேன்னு உம்மாக்கிட்ட கேட்டுக்கிட்டு வாடா...’ன்னுட்டார்.  நான் என் அம்மாகிட்டகேட்டப்பா, ‘பெரியகாத்து அடிச்சப்ப நீ வயித்தில இருந்தே.  அப்பறம் வந்த சித்திரை மாசக்கடைசியில அமாவாசைக்கு மூணு நாளைக்கு முன்னால அந்தியில பொறந்தேன்னு சொன்னதை அப்படியே வாத்தியாருக்கிட்டச் சொல்லிட்டேன்.
                சுந்தரபெருமா! இந்த ஊருக்குள்ள எப்ப பெரிய புயல்காத்து அடிச்சுச்சின்னு எனக்கு எப்படிடா தெரியும்?  எங்க இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டு நான் மாட்டிக்காம ஒரு தேதியிலதான் பொறந்தேன்னு எழுதிடுறேன்னு சொன்னார்.
                வாத்தியாரு என்னா வேணும்ன்னாலும் எழுதிக் கிட்டும்ன்னு தான் அப்பைக்கு இருந்திருப்பேன்.  பொறந்த தேதியைப் பத்தி அப்பெல்லாம் யாரு கண்டுக்கிட்டா?  எங்கள் ஊருக்குள்ள பள்ளிக்கூடம் ஒன்னு வரும்ன்னு நினைச்சிக்கூட பார்த்திருக்கமாட்டாங்க.  காமராசர் முதலமைச்சரா வந்துதான் இந்த பிச்சைமுத்து வாத்தியாருக்கிட்ட கால்கடுதாசி கொடுத்து அனுப்ப ஊருக்குள்ள வந்தார்.  கூடவே அப்ப டிஸ்டிக்போர்டுல இருந்த முதலியார், பண்ணைக்கு எழுதிக் கொடுத்து அனுப்பியிருந்த கடுதாசியிலபள்ளிக்கூடம் ஏற்படுத்த ஒரு இடம் தர்றதுஎன்று வாத்தியாரை அனுப்பி வைச்சதைத் தட்டமுடியாம பண்ணைக்காரர் வீட்டுலேயே வண்டிக் கொட்டாவையில இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். 
                பண்ணைக்காரருக்கு இதிலயும் ஒரு கணக்கு இருந்திச்சி.  தான் ஊட்டுப்புள்ளையைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம வீட்டுலேயே வச்சி சொல்லிக் கொடுக்கச் சொல்லிட்டார்.  அந்த பிச்சமுத்து பறை வாத்தியாராம்.  அவன் பள்ளுபறைய னெல்லாம் தெரட்டி வச்சிக்கிட்டு பள்ளிக்கூடம் நடத்த எடம் கொடுத்திருக்கிறது தரித்திரத்தை வெலை கொடுத்து வாங்கியிருக்கிறாப் போலத்தான் இருக்கு.  அம்மையப்பன் காசுக்காரத்தெரு பள்ளிக்கூடத்துல ராஜகோபால் அய்யர் வாத்தியாரா இருக்கார்.  பேசாம நம்ம வீட்டுப்புள்ளைங்களை அங்க அனுப்பிடலாம்...’  குருக்கள் வீட்டம்மா பண்ணைக்கு மந்தரம் போட்டதும் பண்ணை சுருண்டுட்டு.
                ஊருக்குத் தெக்க தலையாரிகள் பொறுப்புல இருக்கிறவாடியை ஒழிச்சி கொடுக்கிறேன்னு சொல்லி வாத்தியாரை அனுப்பி வைச்சிட்டார்.  ஊருக்குக் கடைசியில புளியமரத் தடியில் இருந்தது அந்த வாடி.  கோட்டு ஆக்கையால கரும்பலகையைக் கட்டி கொட்டாவை குறுமாடியில் சுருக்குப் போட்டுத் தொங்கும்.  கை ஒடிஞ்சிப்போன நாற்காலி ஒன்னு கிடக்கும்... இங்கதான் எனக்கு அனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த இடம்.  என்னோட கால்சட்டைக்கால தெருத் தோழர்கள் பொட்டை சாமிநாதன், செல்லதுரை, தியாகராசன், ராசேந்திரன் இதுல சாமிநாதன் முண்டன்.  நாங்க நாலு பேரும் சேந்தாலும் அவனை தள்ளிடக்கூட முடியாது.  சண்டைன்னு வந்தா எங்களை வரைதரை இல்லாம அடிச்சிப்புடுவான்.  அந்த பயத்திலேயே இருப்போம்.  நாங்க அவனை ஒதுக்கிடவும் முடியாது.  அவன் துணையில்லாட்டா எங்க வீட்டுல இருக்கிற கறவை எருமைகளையும்  உழவுக்கு வச்சிருக்கும் எருமைக்கடாக்களையும் விடியறதுக்குள்ள பால்காரர் வர்றதுக்கு முன்னாடி குளத்துக்கு ஓட்டிக்கிட்டுப்போய் குளிப்பாட்டி ஓட்டுக்கிட்டு வந்து சேரமுடியாது.
                ட்டுருவான்னு அவன் கொடுக்கும் குரலுக்கு எருமைக கட்டுப்பட்டு அடங்கிடும்.  அவன்கிட்ட அபாரமான வசியசக்தி இருக்குன்னு நம்பிக்கிட்டு இருந்தோம்.  எருமைகளோடவே நாங்களும் குளிச்சிடுவோம்.  பொட்டைசாமிநாதனை சுளை இல்லாத முரட்டுப் பலாக்கான்னு தான் வாத்தியாரு சொல்லு வார்.  நான் ஆறாம் கிளாஸ்க்குப் போறவரைக்கும் அங்காளம் மைக்கு வேண்டுதல் விட்டு இருக்கும் மயிரை வாகு எடுத்து ரெட்டை ஜடை பின்னிவிடும் அம்மா.  புட்டாமாவு அடிச்சி கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வச்சிவிடும்.  நான் கண்ணாடி பாக்கிறவரைக்கும் ரொம்ப அழகாத்தான் இருந்தேன்.
                ஒவ்வொரு நாளும் காலையில நானும் சாமிநாதனும் வாத்தியாரு முன்னால முதல் ஆளா போய் நிப்போம்.  வாத்தி யாரு படிச்சிக் கொடுக்க ஊர்கோலி வரப் புறப்படும்போது நாங்களும் துணைக்குப் போவோம்.  ஓடி ஒழிஞ்சதுங்க போவ மீதி பத்து பேராச்சி தேறிடுங்க.  பள்ளிக்கூடத்துக்குத் திரும்பி வரும்போது சூரியன் உச்சிக்குக் கிட்டத்தில வந்திடும்.  அதுக்குப் பிறகு எங்களோட வாத்தியாரும் பொதி மணல்ல எழுதிக் கத்துக்கொடுப்பார்.  நாங்க எல்லோரும் எழுதி முடிக்கங்காட்டியும் சாமிநாதன், பசிக்குதுன்னு நாலுபேரை அழைச்சிக்கிட்டு பெரிய தோப்புக்குப் போயிடுவான்.  எந்த மரமா இருந்தாலும் அப்படித் தாவுவான்.  குரங்கு கூட அவன்கிட்ட பிச்சை வாங்கணும்.  எந்தப் பருவத்திலயும் ஏதாச்சும் காயோ பழமோ கிடைச்சிடும்.  மத்தியான வயிறு ஆறிடும்.  நாங்க நாலாவது வரும்போதுதான் மதிய உணவு போட்டாங்க.
                மாங்காணேசன், டீக்கடை ராஜாங்கம், தங்கையன் இவர்கள்ல ஒருத்தராச்சும் வாத்தியாரோடவே இருப்பாங்க.  பள்ளிக்கூடத்துக்கு ஒரு இடம் தேடியாகணுன்னு முடிவு செஞ்சாங்க.  ஊராட்சி ஒன்றியத் தலைவரா இருந்த முதலியாரை ஊராட்சி சாலையில் தென்னங்கன்னு நடு விழாவுக்கு அழைக்க ஏற்பாடாகியிருந்தது.  அன்னிக்கு எங்களை வச்சே தலைவரை குறுக்க மறிக்கிறதுன்னு திட்டம்.  அன்னிக்கு இருவதுக்குக் குறையாத புள்ளைங்க வந்துட்டுங்க.  நாங்க எப்புடி நடந்துக்கிறதுங்கிறத சொல்லிக் கொடுத்திட்டாங்க.  இந்த ஏற்பாடு பண்ணைக்கோ ஊராட்சித் தலைவருக்கோ தெரியாமத்தான்.  யாரும் நாங்க குறுக்க உக்காந்து மறைக்கப்போறோம்ன்னு எதிர்பார்க்கல.  தலைவர் காரை மறிச்சிவேண்டும் வேண்டும் பள்ளிக்கூடத்துக்கு எடம் வேண்டும்கோஷம் போட்டதும், தலைவர் திகைச்சிப் போயிட்டார்.  எறங்கி வந்தார்.  எனக்குச் சொல்லிக் கொடுத்ததை ஒன்னுவிடாம ஒப்பிச்சிட்டேன்.
                எங்களைத் தூண்டிவிட்டது வாத்தியாரும் அவரோடு சுத்திக்கிட்டு இருக்கிற கலகக்கார வங்கன்னு தலைவரோட எடுபிடிங்க வத்தி வச்சிட்டுங்க.  அவரு பெரிசா எடுத்துக்காம அவங்களைக் கூப்புட்டு வரச்சொல்லி, ‘சீக்கிரம் ஏற்பாடு செஞ்சு தாறேன்ன்னு சொன்னத நாங்க ஏத்துக்காம, ‘இப்பவே வேணும்ன்னு கோஷத்தைக் கிளப்பிட்டோம்.  வேற வழியில்லாம பண்ணைக்காரரைக் கூப்பிட்டு அவர் அனுபவத்தில இருந்த கோயில் இடத்தில பள்ளிக்கூடம் கட்ட ஆணை போட்டதும்தான் காரை போவவிட்டோம்.
                தத்திஉத்தி அம்மையப்பன் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.  அப்பதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் முச்சூடும் நடந்துகிட்டு இருந்துச்சு.  எல்லா மாணவர்களும் போராட்டத்தில குதிச்சதும் எங்க பள்ளிக்கூடத்திலயும் தீவிரமா எறங்கிட்டாங்க.  இந்தப் போராட்டத்தோட உச்சகட்டத்தில ஊருக்கு ஊரு முன்னுக்கு நின்னவங்களை கைது பண்ணிக்கிட்டு இருக்கும்போது, எங்கப் பள்ளிக்கூடத்துக்குத் தலைமை தாங்கின பழனி அய்யா, ஜெயராமன், லெட்சுமணன், ஜெயசீலன், காவனூர் கோ. கலியபெருமாள், கோவிந்தராசு இவங்களெல்லாம் தலைமறைவா இருந்துகிட்டு விடிஞ்சதும் தபால் ஆபீஸ் முன்னால வந்து நூத்துக்கு மேற்பட்டவங்களைத் தெரட்டிட்டாங்க.
                இந்தி ஒழிக! கக்கா!  மாணவர்கள் உனக்குக் கொக்கா?’ இப்புடி கோஷம் போட்டுக்கிட்டு கொடும்பாவி எரிக்கும்போது பெரிய கலவரமாயிட்டு.  போலீஸ் எல்லாரையும் சுத்தி வளைச்சி கைது பண்ணி லாரியில ஏத்திக்கிட்டாங்க.  அதில நானும் ஒருத்தனா இருந்தேன்.   நீடாமங்களம் பங்களாவில கொண்டுபோய் அடைச்சிட்டாங்க.  நாங்க காலையில வீட்டவிட்டு வந்தது.  கையில தம்புடி காசு கிடையாது.  ராத்திரி பத்துமணி வரைக்கும் சோறு தண்ணி காட்டல.  வேறுவேறு ஊருகளில் இருந்து கொண்டுவந்து அடைச்சிருந்தவங்களும் சேந்து சத்தம் போட ஆரம்பிச்சிட்டோம்.
                போலீஸூக்கு என்னா பண்ணுறதுன்னு மட்டுப்படாம போயிட்டு.  பன்னெண்டு மணிக்கு மேல எங்களை வெளியே விட்டுஓடுங்கடான்னு விரட்டி அடிச்சதும் பசியோட நடந்தே வந்துகிட்டு இருந்தோம்.  அப்ப வெளியே இருந்து எங்களுக்குத் தலைமை தாங்கியிருந்த .சி. மணியனோட, கலைஞர் கருணாநிதி தலைமை ஏற்று கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சோமசுந்தரம், ஜெயச்சந்திரன், மாங்காகணேசன், தங்கையன் கொரடாச்சேரிக்கு வந்து காத்துக்கிட்டு இருந்தாங்க.  இவங்களோடு பிச்சைமுத்து வாத்தியாரும் வந்துட்டார்.  பிச்சைமுத்து வாத்தியாரு என்னைப் பார்த்ததும், ‘சுந்தரபெருமான்னு அளக்கா என்னைத் தூங்கி முத்தம் கொடுக்கும்போது நான் அழுதுட்டேன்.  அப்ப கொரடாச்சேரி கழக உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்பு படிக்கும்போது போராட்டத்துக்கு தலைமை தாங்கியிருந்த தாழை
மு. கருணாநிதி, பொன்நரசிம்மன், வில்வளவன் இவங்கள்லாம் சேந்து ஒரு கடையைத் தொறக்க வச்சி ரொட்டியும் டீயும் வாங்கிக் கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  என்னை பிச்சமுத்து வாத்தியாரே வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரும்போது என் அப்பா கண்ணு செவந்துபோய் ஆத்திரமா உக்காந்திருந்ததை நான் பார்த்ததும் வாத்தியாருக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிட்டேன்.  என்னோட கால்சட்டை தொப்பரையா நனைஞ்சி போயிட்டு. 
                என் அப்பா வாத்தியாரு மூஞ்சைப் பார்த்ததும் பொட்டிப் பாம்பாட்டம் அடங்கிப்போயி, ‘வாத்தியாரைய்யா! உங்க மூஞ்சிக்காவ இவனை உடுறேன்.  இல்ல...’ அப்பாவோட உதடும் கையும் துடிச்சிச்சி.  புள்ளை! மவனை வீட்டுக்குள்ள உள்ள அழைச்சிக்கிட்டுப் போங்க.  காலையில பேசிக்கலாம்...’ என் கையைப் பற்றி அப்பா கையில் கொடுத்தார். 
                அன்னிக்கு பிச்சமுத்து வாத்தியார் என்னைத் தூக்கிக் கொடுத்த முத்தத்தின் சுகம் தந்த  ஆனந்தக் களிப்பு என் நெஞ்சுக்குள் இப்பைக்கும் பரவிக்கிட்டுத்தான் இருக்கு.
புதியபார்வை’   16-31 மார்ச் 2007

தஞ்சைப் பெரிய கோவிலும் தமிழும்



பிற்கால சோழமன்னர்களில் தனிச்சிறப்பு மிக்கப்  பெருவேந்தன் ராசராசன் ஆவான். இவனுடைய வரலற்றினை அறிய இம்மன்னனின் மெய்க்கீர்த்திகளடங்கிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பெரிதும் துணைபுரிகின்றன. விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் உலா, கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியச் சான்றுகளும் குறிப்பிடத்தக்கன.
     அருண்மொழி எனும் இயற்பெயர் கொண்டவன். ராசராசன் என்ற சிறப்பு பட்டப்பெயரோடு முடிசூட்டப்பட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவன்.
      அருண்மொழி. குழந்தையாக இருக்கும் போதே அவன் தந்தையார் சுந்தரசோழன் இறந்துபடுகிறான். அவனைப் பெற்றவள் வானவன் மாதேவியாரும் உடன்கட்டை ஏறினாள்.  "...அரக்கர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரைத் துடைக்க சுந்தரச்சோழன் விண்ணுலகெய்தினான்... எனது கணவர் சுந்தரர் அழகு மிக்கவர். ஆதலின் தேவப்பெண்களெல்லாம் அவரை விரும்புவர். அதற்கு நான் உடன்படேன்... வீரராகிய தன் கணவர் இறந்துபட அப்ஸரப் பெண்களெல்லாம் அவரை அங்கே அணைத்து விடுவார்களோ என்று பயந்து அவர் அருகிலேயே எப்பொழுதும் உடன் இருக்கச் சென்றாள்''  என்று திருவலங்காட்டுச் செப்பேடுச் செய்யுட்கள் குறிப்பதாக செப்பேட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
     இப்படியான பண்பாட்டுச் சூழலை,  சதி என்ற உடன்கட்டை ஏற்றுதலை.  வடஇந்தியாவில் வலிந்து நடைமுறைப்படுத்தியவர்கள்  பிராமண மதத்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இம்மண்ணில் ஆதியில் இருந்து குறிப்பாய் தமிழகத்தில் சிவாகமத்தை நடைமுறையில் வைத்திருந்த சிவமதத்தின் ஆட்சியில் இப்படியாய்  பெண்களை ஒடுக்கியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
     இதே சோழபரம்பரையில், "...மழவர் குலத்தில் தோன்றிய முதற்கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியான செம்பியன்மாதேவி தன் கணவனை இளமைப்பருவத்தில் இழந்தும், குழந்தையாயிருந்த தன் ஒரே புதல்வனாகிய உத்தமசோழன் பொருட்டு உயிர் வாழ்ந்தாள்... அவள் எல்லையற்ற சிவபக்தி படைத்தவளாய்ச் சிறப்புற்றிருந்தமையால் `மாதேவடிகள்' எனவும் வழங்கப்பெற்றவள்...'' என்று பிற்கால சோழர் வரலாறு என்ற நூலில் ஆவணப்படுத்தும் தி.வை. சதாசிவப்பண்டாரத்தார், செம்பியன்மாதேவி, தன் கணவன் முதல்கண்டராதித்தன் இறந்தபின் உடன்கட்டை ஏறவில்லை என்று தெளிவுபடுத்துகிறார். இதில் இருந்து நாம் தெளிவு பெற வேண்டியது கண்டராதித்தச்சோழன் வேதஆகமத்தை ஏற்க வில்லை என்பதே. 
     இம்மண்ணில் சிவஆகமத்தையும், தமிழையும் தன்னாட்சியில் நடைமுறை படுத்தியிருக்கிறான். அதனால் `சிவஞானகண்டராதித்தன்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் பட்டு இருக்கிறான் என்று சாசனங்கள் குறிப்பதாக பண்டாரத்தார் எழுதுகிறார். அதனால் தான் பிராமணப்பண்பாடு வலியுறுத்தும் உடன்கட்டை ஏற்றுதலை செம்பியன்மாதேவி நிராகரித்து  சிவப்பண்பாட்டின்படி வாழ்ந்திருக்கிறாள்.
     இத்தேவியார், தமிழகக் கலை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் தகுதியை உடையது.  தாயாரையும் தந்தையாரையும் இழந்த அருண்மொழியை இளமையில் அன்னைக்கு அன்னையாய், அன்பு செலுத்தும் தாயாய் வளர்த்தவர்கள், அவன் பாட்டி முதல் கண்டராதித்த சோழன் மனைவியாகிய செம்பியன் மாதேவியும் அவன் உடன் பிறந்த தமைக்கையாகிய குந்தவைப் பிராட்டியுமாவர்.  அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிவனடி மறவாத சிந்தையராய் தம் ஆற்றலையும் செல்வத் தையும் செலவிட்டு அழியாப் புகழடைந்திருக்கிறார்கள்.
     `...கண்டராதித்த சோழனின் மகனான மதுராந்தகன் என்னும் உத்தமசோழன், தன் தந்தையின் இறப்பின் போது சிறு குழந்தையாக இருந்ததால்,  மதுராந்தகனின் சிற்றப்பா, அரிஞ்சயன் முடிசூட்டப் பெற்றான். அரிஞ்சயனுக்குப் பின் பராந்தகன் என்று அழைக்கப்பட்ட சுந்தரசோழன் ஆட்சி செய்தான். அதன் பின் சுந்தரசோழனின் மகன் அருண்மொழி பட்டம் பெற்று அரசாளவேண்டும் என்று மக்கள் விரும்பினர்...' என்று திருவலங்காட்டுச் செப்பேடுகளில் அறியலாம்.
     சுந்தரசோழனின் மனைவியர் -  பராந்தகன் தேவியம்மன், வானவன் மாதேவி ஆகியவர். இவர்களுக்கு ஆதித்தகரிகாலன், அருண்மொழி ஆகிய இருமகன்களும் இருந்திருக்கிறார்கள். ஒரே மகள் குந்தவையைக் கீழைச் சாளுக்கியர் மரபினன் என்று கருதப்பெரும் வல்லவரையான் வந்தியத்தேவனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்'' என்று கொடும்பாளூர் கல்வெட்டில் காணக்கிடக்கிறது . 
      அன்னோர் அங்ஙனம் விரும்பியும்  அருண்மொழியின் பாட்டனின் மகனும், தன் சிறிய தந்தையுமான உத்தமசோழன் அரசனாக இருந்து சோழநாட்டை ஆளும் உரிமையையும்  விருப்பத்தையும் மதித்து  ஆட்சியை அளித்திருக்கிறான் அருண்மொழி என்பதை இங்கு உணரலாம்.  எனவே,  அருண்மொழி நியாய உணர்ச்சியும், அறநெறி பிழையாக் கொள்கையுடன் இருந்திருக்கிறான்.  இப்படியான மனப்பான்மையை வளர்த்தவர்கள் இவனின் பாட்டியான செம்பியன்மாதேவியும், இவனுக்கு மூத்த சகோதரியான குந்தவையுமல்லவா?  உத்தமசோழன் கி.பி.970 இன் தொடக் கத்தில் முடிசூட்டப்பெற்றான் என்று திருவிடைமருதூர் கல்வெட்டுக் காட்டுகிறது என் குறிப்பிடுகிறார் பண்டாரத்தார். 
     கூடவே  இந்த உத்தமச்சோழன், ஆதித்தக்கரிகாலனின் கொலைக்கு காரணமாக இருந்தான் என்ற குறிப்பும் வரலாற்றில் காணக்கிடக்கிறது.  இந்த ஆதித்தக்கரிகாலன், சுந்தரசோழனின் மூத்த மகன் ஆவான். இவன் தந்தை பட்டம் ஏற்று  பழையாறையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். தந்தையின் கட்டளையை ஏற்று, படைக்குத் தலைமை தாங்கி  பல போர்களை செய்து வெற்றிகளைக் குவித்தவன்.  தமிழ்புலவர் களை ஆதரித்தவன். இவன் ஆட்சியில் சிவனை விளிக்கும் `அர' என்னும் ஒலியே கேட்கப்பட்டது. எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.
     அப்படி என்றால் `அரகர சிவ' என்ற மந்திர ஒலியின் அடிநாதமாக கொண்டிருந்தவர்கள், சிவனை தென்னாடுடையவனாகப் போற்றியவர்களே.    சுந்தரசோழன் ஆட்சியில் `சோமன், இரவிதாசனான பஞ்சவன், பிரமாதிராசன், பரமேசு வரனான பிரமாதிராசன் ஆகிய இவர்கள் பார்ப்பனர் மட்டுமல்ல உடன்பிறந்தோர். இன்னும் பலரும்   சுந்தரசோழன் ஆட்சியில் உயர் பதவி வகித்தோர் ஆவார்.
     இந்த ஆதித்தக்கரிகாலன், இவர்கள் வேதஆகமத்தை கைகொள்ளத் தடையாக இருந்திருக்கிறான்.  சிவஆகமத்தை நடைமுறையில் கொண்டது பிடிக்காமல் தான் ஆதித்தக் கரிகாலனைக் கொலை செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் உத்தமசோழனிடம்,  தங்களின் அரசியல் பலத்தைக் காட்டியே தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டார்கள். உத்தமசோழன் அதிகார பலம் பெற்று இருந்தாலும் அவர்கள் பக்கம் சாய்ந்து போனான். அவர்கள் விருப்பப்படியே உத்தமசோழன் ஆட்சியில் வெளியிடப்பட்ட தங்கக்காசில்  புலி உருவம் பொறிக்கப்பட்டு கூடவே உத்தமசோழன் என்ற பெயரை சமஸ்கிருதத்தில் பொறித்திருக்கின்றனர். 
     இதை சர் வால்ட்டர் எலியட்யின்  `தென்னிந்திய காசுகள்'  என்ற நுhல் உறுதிப்படுத்துகிறது.  சோழ அரசில்  அதிகாரத்தில் இருந்து கொண்டே பிராமண மதக்கொள்கைகளை கடைப்பிடித்துக் கொண்ட தலைமைப் பதவிகளில் இருந்தவர்கள், தமிழையும் சிவமதத்தையும் வேரறுக்கும் பணியினை ரகசியமாகவே செய்து வந்ததிருக்கிறார்கள். இதனால் தான் உத்தமசோழன், ஆதித்தக்கரிகாலனைக் கொன்றதாக ஒரு கூற்று இருக்கிறது.
     சுந்தரசோழன், தன்னுடைய தலைமகன் ஆதித்தக் கரிகாலன் கொலையுண்டதும் மனமுடைந்து கி.பி. 969 இல்இறந்து போனான். அவன் பட்டத்தரசியான வானவன் மாதேவி உடன்கட்டை ஏற்றப்பட்ட செய்தியையும் சுந்தரசோழனின் இளைய மகன் அருண்மொழி தந்தைக்குப்பின் தான் பட்டம் ஏற்காமல் தன் சிற்றப்பாவான உத்தமச்சோழனை பட்டமேற்க இசைந்திருக்கிறான். இதற்கு ஆதாரமாக இருப்பன திருவாலங்காட்டு செப்பேடும், திருக்கோவிலூர்க் கல்வெட்டும் என்கிறார் சதாசிவப்பண்டாரத்தார்.
     ஏழாம் நூற்றாண்டு தொடங்கி `தென்னாடுடைய சிவனேப் போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'யென சிவத்தையும் தமிழையும் முன்வைத்து குரல் எழுப்பிய, பக்தி இலக்கியக்காரர்கள், தமிழ் மொழியை முன்வைத்த சிவமத ஆட்சிக்கான அடித்தளம் போட்டார்கள். 
தஞ்சைப் பழையாறை சோழ சிற்றரசும் சிவமத அறிவாளிகளும் வளர்த்தெடுத்தார்கள். இவர்கள் நோக்கமெல்லாம் இம்மண்ணில் ஏக போக சிவஆட்சியை நிலைநாட்டுவதோடு இல்லாமல் தமிழை உயர்நிலைக்கு கொண்டு வரவும்  சிவஆகமவழி திருக்கோவில்களையும் மக்களையும் பண்படுத்தி ஒருங்கிணைத்தாக வேண்டும் என்பதே. 
     அதாவது சிவஆலயத்தில்  பிராமணர்களின் தந்திர உபாயங்களால்  பிராமணப்பண்பாட்டை தமிழ்ஆகமத்தோடு கலந்து நச்சாய் திணித்த வேதஆகமத்தை வெளியேற்றுவதே பெரு நோக்கமாக இருந்தது.  இதற்காக சிவமதத்தை முன்னெடுத்துச் செல்லும் அறிவாளிகள், வழிநடத்தி அரசியல் அரங்கில் மூடுமந்திரமாக செயல்படுபவர்களோடும் பக்தி இலக்கியக்காரர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு போராடினார்கள். சமண, பௌத்த மதங்களோடு நேரிடையாகவும் பிராமணமதத்தவர்களோடு மறைமுகமாகவும் போராட வேண்டியிருந்தது.
     அந்த நீண்ட நெடியப் போராட்டத்தில் தான் ஆயிரக்காணக்கானவர்கள் உயிர்பலிக் கொடுத்து தென்னாடுடைய சிவனையும் தமிழையும்,  தங்கள் பக்கம் நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. அதே நேரம் அவர்கள் சிவமதத்தை முன்னிறுத்தவும் தமிழைவளர்த்தெடுக்கவும் ஆட்சி அதிகாரத்தை சோழப்பெருமண்ணில் நிலைநாட்டிடும் நோக்கம் அவர்கள் எதிர்ப்பார்த்தது போல அமைந்துவிட வில்லை.  அதேசமயம் சிவமதத்தின் பக்கம் மக்கள் திரண்டு நின்றார்கள். வேளாண்உற்பத்தி உறவுகளுக்கு இப்படியான அவசியத் தேவையாகவும் இருந்தது.
     பக்திஇலக்கியப் போக்குகள், சோழ பேரரசு உருவாகத் தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து பங்காற்றியிருக்கிறது. பிராமணமதத்தவர்களும் இந்தப்போக்கிலேயே பயணித்து, சமணபௌத்த மதங்களின் ஆட்சியில் மறைமுகமாகப் பங்கு கொண்டு இருந்ததோடு இல்லாமல் அதன் வழியே சிவமதத்தையும் செறித்துவிடும்படியான வழிமுறைகளை திட்டமிட்டு செய்து வந்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். அப்போக்கு தான் `காலடி சங்கரனின் அத்வைதத் தத்துவத்தை'ப் பெரும் வெற்றியடையச் செய்தது. சிவமதத்தின் பண்பாட்டு வடிவமான தமிழ்ஆகமதத்தில் வேதத்தைக் கலந்து வேதஆகமமாக ஊருமாற்றிடும் தந்திரஉபாயம் வெற்றி அடைந்தது. சிவமதத்தில் இருந்த ஒரு பகுதியினரை அவர்கள் தம் பக்கம் திரும்பினார்கள். அதன் வழியே கடவுளர்களின் மொழியாயும் ஆட்சி மொழியாயும் சமஸ்கிருத்தைக் கட்டமைத்துக் கொண்டார்கள்.
     உத்தமசோழனுக்குப் பிறகு கி.பி. 985 இல் அருண்மொழி சூன் திங்கள் அரியணை ஏறினான். அந்நாள் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது என்றும், சோழநாட்டை விரிவு படுத்தத் தொடர்ச்சியாக  பல போர்களைப் புரிந்து வெற்றிகளை ஈட்டியிருக்கிறான் என்றும், அவன் மைந்தன் ராஜேந்திரனும் இளவரசு பட்டமேற்று படைக்குத் தலைமை தாங்கி பல போர்களை நடத்தியிருக்கிறான் என்றும் அவர்களது போர்ச் செயல்களைப் பற்றியும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறும் செய்திகள் விரிவானவை என்கிறார் பண்டாரத்தார்.
     தமிழ்நாட்டு வரலாற்றில் ராசராசன் பெருவேந்தனாக வளர்ந்துக் கொண்டிருக்கும் தருவாயில் தன் மக்களையும், நிலஉடமையையும் ஒழுங்குபடுத்த பிரமாண்டமான ஈர்ப்பு தேவைப்பட்டது. இந்திய மண்ணிலேயே ஈடு இணையில்லாத ஒரு கோயிலை எடுப்பிக்க எண்ணினான். பெருவேந்தனாக எவ்வாறு விளங்கினானோ அதே போன்று பெரும் `உடையாரை' (சிவலிங்கத்தை) கோயிலில் அமைத்திடச் செய்தான்.  
     பெருவேந்தர் ராசராசனின் ஆட்சியின் பெருமையையும் சிறுமையையும்   அரசப் பண்டாரத்தில் இருந்த பெருசெல்வத்தைக் கொண்டு அவன் கட்டிய பெருவுடையார் கோயில் சோழர் கால கலைகள் சாட்சியாக அமைந்திருக்கின்றன. இது வரலாற்று சாட்சியம் என்பதில் நமக்கு ஐயமில்லை.
     அவனின் ஆட்சி விரிவடைந்தது போலவே ஆட்சிக்குள் தலைமைப் பொறுப்புகளில் இருந்த வேதபிராமணர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது. அவன் கட்டுவித்த பெருங்கோவிலுக்குள் வேதஆகம நடைமுறையை உட்புகுத்தினார்கள். புரோகிதர்கள் பற்றாக்குறையை நிறைவு செய்ய ஆயிரம் பிராமணர்களை வெளிதேசங்களில் இருந்து அழைத்து வரும்படி செய்தார்கள். அவர்களுக்கு சுகபோக வாழ்வு தர பண்டாரத்தில் இருந்து பெரும்படியான செலவை செய்யும்படி ஆயிற்று.
     தன் ஆட்சியில் இருந்த நிலங்களை அளவை செய்து தகுந்த வரிவிதிப்புகளை போட்டு கோயில் பண்டாரத்தை நிரப்பும்படியான தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. வேளாண்மை உற்பத்தியில் கிடைத்த வருவாயைக் கணக்கிட்டு வரிமேல் வரி விதிக்க  வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. வேளாண்மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள்.  உயர்பதவியில் இருந்த வேதபிராமணர்கள் வேளாண்மக்களிடையே கலகங்கள் ஏற்பட்டு விடாமலும் அவர்கள் ஒன்று திரண்டு விடாமலும் இருக்க வர்ணதர்மத்தை இறுக்கமாகக் கடைபிடிக்க அரசுக்கு வழிகாட்டினார்கள்.
     ராசராசனின் மனைவிமார்கள் எண்ணிக்கை ஏறக்குறைய பதினைந்து.  ஆயினும், உலகமகாதேவி என்று  அழைக்கப் படுவளாகிய `தந்தி சக்தி விடங்கி' என்பவளே பட்டத்தரசியாக விளங்கினாள். ராசராசனின் ஒரே மகனான இராசேந்திரனின் தாயார் திரிபுவன மகாதேவி என்று அழைக்கப்பட்ட வானவன் தேவியே ஆவாள். திருவிசலூர் கோயிலில் இராசராசன் துலாபாரம் ஏறும் போது, தந்திசக்தியும் இரணியகர்ப்பம் புகுந்தாள் என்று அக்கோவில் கல்வெட்டுகள் சான்றுபகர்கின்றன. கே.ஏ. நீலகண்டசாஸ்திரியார், `சோழர்கள்' என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
     துலாபாரம் செய்யவும் இரணியகர்ப்பம் புகவும் புதியதாக தனித்த மண்டபம் கட்டி அம் மண்டபத்தில் ஒன்பது நாள்கள் யக்ஞ குண்டம் வளர்த்து நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் வேதமந்திரங்கள் சொல்லி நிறைவு செய்வார்கள். அதன் பின்னர், அம்மண்டபத்தில் `துலாபாரம்' நிறுத்தி ஒருபக்கத்தில் மன்னன் அமர மறுபக்கத்தில் பொற்குவியலை கொட்டி சமப்படுத்துவது தான் துலாபாரம் ஏறுதலாகும்.
     ஒருமனித உருவம் தாராளமாக உள்ளே புகுந்து வரும் அளவிலான பசுவின் கர்ப்பப்பைப் போன்று பொன்னால் செய்வித்து அதனுள் குழந்தை வேண்டுபவர் புகுந்து வரச் செய்வதே இரணியகர்ப்பமாகும்.  தங்கத்தால் ஆன இவற்றை  செய்து, யக்ஞ குண்டம் வளர்த்து, புரோகிதர்களிடம் அளித்து விடவேண்டும் என்பதே. அவர்கள் அவற்றை பங்கிட்டுக் கொள்வார்கள். இதைச் செய்ததின் மூலம் இராசராசன் தன் ஆட்சியில் வேதஆகமத்தைக் கடைபிடித்தான் என்பது உறுதிபடுகிறது.
     சோழகால நாணயச் செலாவணியில் ராசராசன் வெளியிட்ட செப்புக்காசுகள் தான் ஆய்வுக்கு கிடைத்திருக்கும் முதல் நாணயமாகும். ஏராளமான காசுகள் கிடைத்திருக்கின்றன. இந்த நாணயத்தில் ஒருமன்னன் அமர்ந்த நிலையில் மலர் ஒன்றை முகர்வது போல இருக்கிறது. மறுபக்கத்தில் `ராசராச' என்று தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்கிறது (நீலகண்டசாஸ்த்திரி) என்பதையும் கொண்டு சோழஅரசு இருமொழி கொள்கையைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
     இப்படியான பிராமணப் புரோகிதர்களின் கட்டுப் பாட்டுக்குள் தான் சோழப்பேரரசின் (பொற்காலம்?) ஆட்சி இருந்திருக்கிறது என்று  புரிந்து கொள்ள எண்ணற்றச் சான்றுகள் காணக்கிடக்கின்றன.
     இதனையும் மீறி தமிழுக்கும் சிவமதத்திற்கும் இராசராசன் பங்களிப்பு செய்திருக்கிறான் என்றால் அந்தப் பணிகளுக்கு பின்னால் இரண்டு பெண்கள் இருந்திருப்பதை உணரமுடிகிறது. அவன் பாட்டியான செம்பியன்மாதேவியும் உடன்பிறந்த மூத்தவளான குந்தவையுமே ஆகும். இவர்கள் இருவருமே சிவபக்தியிலும் தமிழ்மீதும் பற்றுக் கொண்டும் இருந்தார்கள். இவர்களின் அன்புகலந்த அறிவுரைகளையும் கேட்டு ஒழுகி வளர்ந்து வந்தவன்  அருண்மொழியாகிய இராசராச சோழன். சிவமதவளர்ச்சிக்குறித்தும், சிற்பம், ஓவியம், முதலானவற்றிலும் கலைவளர்ச்சியிலும் பெரிதும் ஈடுபட அவனுக்கு ஆர்வமூட்டி வளர்த்தார்கள் என்று பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
     கண்டராதித்தச் சோழரின் தேவியரான செம்பியன் மாதேவி, தன் கணவர் இறந்த பின்னர், அரிஞ்சயன், சுந்தர சோழன் உத்தமசோழன் ஆகிய மூவர் ஆட்சிக்காலத்திலும் இராசராசன் ஆட்சியின் கி.பி. 1011 வரையிலும் உயிருடன் இருந்தவர்.
"இன்றைக்கு உலகமே போற்றி வியக்கும் சோழர்கால கலைப்படைப்புகளாக உள்ளவை  திருக்கோயில்கள், கற்சிற்பங்கள், செப்புத்திருமேனிகள் ஆகும்.  இவற்றை வரிசைப்படுத்தி நோக்கிடும் போது `செம்பியன்மாதேவி பாணி' எனத் தனித்த ஒருவகைப் பாணியை உருவாக்கியப் பெருமை இத்தேவியின் வரலாற்றுச் சாதனையாகும்.  `பாரட்' போன்ற வெளிநாட்டுச் சிற்ப இயல் வல்லுநர்கள் `செம்பியன் மாதேவி பாணி' எனத் தனித்த முத்திரையுடன் கலைப்படைப்புகளை அவர்கள் தம் நூல்களில் வெளியிட்டு உள்ளனர்'' என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் தம், ‘சோழமண்டலத்து சிற்பங்களும், ஓவியங்களும்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்
     இராசராசனின் தமக்கையார் குந்தவை, தன்னுடையப் பாட்டியான செம்பியன்மாதேவியாரின் குணநலன்கள் அனைத்தையுமே பெற்று இருந்தவர். தன் தமயனின் ஒவ்வொரு வளர்ச்சியில் பெரிதும் ஈடுபாடு கொண்டு துணைபுரிந்தவள். இராசராசன் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு தானும் தன் தமக்கை குந்தவையும் அளித்த செல்வங்களையும் கூடவே இருந்து செய்த பங்களிப்பையும் தான் கட்டிய பெருவுடையார் கோயிலின் நடுவிமானத்தில் பொறிக்கச் செய்ததில் இருந்தும், தன் இளையமகளுக்கு குந்தவை என்று பெயரிட்டதில் இருந்தும் அவனும் தமக்கையிடத்து பேரன்பு கொண்டிருந்ததை நன்குணரமுடியும்.
     இம்மன்னன் தன் பாட்டனாகிய அரிஞ்சயனையும் பெரிய பாட்டியாகிய செம்பியன்மாதேவியையும் நினைவு கூர்தற்கு அறிகுறியாக முறையே வடஆற்காடு மாவட்டத்தில் `மேற்பாடி' என்னும் ஊரில் அரிஞ்சயேச்சுரம் என்ற கோயிலும், திருமுக்கூடலில் `செம்பியன் மாதேவிப் பெருமண்டபம்' என்ற மண்டபமும் கட்டியிருப்பது இவன் தன்னை வளர்ப்பித்தவர்களிடம் எத்துணை அன்பும் பாசமும் கொண்டு இருந்தான் என்பது தெளிவு.
     தொடக்க கால சோழப் பேரரசில் கோயில் என்றாலே தில்லைக்கோயிலைத்தான் குறிக்கும். அக்கோயில் தான் தலைமையிடத்தைக் கொண்டு இருந்தது. இக்கோயில் வேதவர்களின் பிடிக்குள் இருந்து கொண்டு இருப்பதை விரும்பாமல் இருந்த ராசராசனின் சடையப்பவள்ளல்கள், பேரரசின் தனித்த அடையாளத்தை கொடுப்பதற்காக தஞ்சையில் பெருஉடையார் கோவிலை அரிய கலைச்செல்வமாக அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்தை வெளியிட அவனும் தன் தலைமேல் சுமந்து தான் அரியகலைக்கோயிலை படைத்தளித்தான் என்று சொன்னால் மிகையில்லை.
     இராசராசன் பிராமணப்புரோகிதர்களின் பிடிக்குள் இருந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தாலும் இப்படியான அரியசெயல்களை பிராமணப் புரோகிதர்கள் தடுத்து நிறுத்திட முடியுமா என்ன? இராசராசன் மனதில் நன்றிக்கடனோடு சுமந்திருந்த இப்பெண்களின் மீது வைத்திருந்த பக்தியே அவர்கள் விரும்பியபடியே பெருஉடையார்கோயிலை கட்டியமைக்கும் போது வேதப்புரோகிதர்களோடு சமரசம் செய்து கொள்ள வில்லை என்றும் உணரமுடிகிறது.  
     இராசராசனை வளர்த்த அந்த இருபெண்களும் பெருவுடையார் ஆலயத்தை அமைத்தலிலும், வழிபாடு நடத்தலிலும்  தமிழ்ஆகமப்படியே அதாவது சிவஆகமப்படியே செய்திடவேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதிலும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதாகவே அமைந்திட வேண்டும் என்று அதற்காக வழிமுறைகளை அவர்களே கண்டு இருக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை அவனும் இயன்றவரையிலும் நிறைவேற்றி இருக்கிறான்.
     இவனால் கட்டப்பட்ட அக்கோயிலில் அமைக்கப்பட்டு இருக்கும் பெருவுடையாரின் - லிங்கத்தின் உயரம் 12 அடியாக - உயிர்எழுத்தாக இருக்கிறது. பெருவுடையாரின் மெய்க் காப்பாளர்களாக இருபக்கமும் நிற்கும் துவாரபாலகர்கள் 18 அடியாக - மெய்யெழுத்தாக இருக்கிறார்கள். பெருவுடையாரும் அவரின்  மெய்காப்பாளர்களும் தனித்தனியாக ஒரே கல்லில் வடிக்கப்பெற்று இருக்கிறார்கள். அக்கோயிலின் உயரம் 216 அடியாக - உயிர்மெய் எழுத்தாக கலையின் உச்சத்தை பெற்று நிற்கிறது.
     இத்திருக்கோயிலுள் அமையப்பெற்று இருக்கும் தென்னாடுகொண்ட சிவபெருமான்  ஒருவனாக - ஆயுத எழுத்தாக அமையப்பெற்று இருக்க வேண்டும் என்பதே அப்பெண்மணிகளின் எண்ணமாக இருந்திருக்கிறது.  ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, 247  தமிழின் மொத்த எழுத்துக்களை உள்ளடக்கியே அக்கோயில் அமையப்பெற்று இருக்கிறது.
     `...கோயிலின் வெளித் திருசுற்றிலுள்ள நந்தி ஒரே கல்லில் அமைக்கப்பட்டது. அது பன்னிரண்டடிஉயரமும் பத்தொன்பதரை அடி நீளமும் எட்டேகாலடி அகலமும் உடையது. கோயில் திருச்சுற்றில் பழைய அடியாராகிய சண்டேசுவரர்க்கும் நந்திக்கும் இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தனவேயன்றி வேறு தெய்வங்களுக்கும் இடமில்லை...' என்று பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார்.
     `இந்த நந்தி ராசராசனால் நிறுவப்பட்டது இல்லை நாய்க்கர் காலத்தில் நிறுவப்பட்டது என்றும் இராசராசனால் நிறுவப்பட்ட  வெளிர் நிறத்தில் சற்று சிறியதாக இருக்கும் நந்தியை வேறு இடத்திற்கு நகர்த்தியிருக்கிறார்கள் என்றும் இப்போது நந்தியை உள் வைத்து கட்டப்பட்டு இருக்கும் மேல்கட்டுமானம் நாயக்கர்கால பாணி என்றும் இன்றைய ஆய்வாளர்கள் சான்று காட்டுகிறார்கள்'
      ஆகமப்படி நந்தி அமைக்கும் போது மேற்கூறை அமைப்பதில்லை. இந்த நந்தியும் இராசராசனால் அமைக்கப்பட்டதே. பிற்காலத்தில் வந்த அரச மரபினர் திருசுற்றில் மாறுதல் செய்யும் போது நந்திககு மேற்கூறை அமைத்திருக்க வேண்டும் என்றே நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் தான் இந்த நந்திக்கும் பெருவுடையாருக்கும் இடைப்பட்ட நடை 247 அடியாக - தமிழின் ஆககூடுதல் எழுத்துகளாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
"...இராசராசன் தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளை நன்கு விளக்கும் மெய்க்கீர்த்தியை இனிய தமிழ்மொழியில் அகவற்பாவில் அமைத்துத் தன் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் மேற்கொண்ட பெருவேந்தன் ஆவான். இவனுக்குப் பிறகு இவன் வழியில் வந்த சோழர்களும் பிறமன்னர்களும் அச்செயலைப் போற்றித் தாமும் மேற்கொள்வாராயினர்.  மெய்க்கீர்த்திகள் எல்லாம் வெறுங்கற்பனைச் செய்திகளல்ல. அவை அவ்வேந்தர்களின் ஆட்சிக்காலங்களில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட உண்மைகளே ஆகும்...'' என்று பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
     எத்துறையிலும் பொதுமக்களுக்கு என்றும் அறிஞர்களுக்கு என்றும் இருவேறான மொழியைப் பயன்படுத்தியவனும் ராசராசனே. தமிழ்கூத்து என்றும் ஆரியக்கூத்து என்றும் ஒழுங்குப்படுத்திவைத்திருக்கிறான்.
     "...உலகவரலாற்றில் நமது தமிழகத்தைத் தவிர வேறு எல்லா நாடுகளிலுமே கவின் கலைகள் மன்னனுக்காக அர்ப்பணிக்கப்பட்டு - அடிமைப் படுத்தப்பட்டு - அந்தப்புரம் வரை சென்று அவல நிலையை அடைந்தன.  ஆனால் நம் தமிழகத்தில் இராசராசனும் மற்றெந்த மன்னர்களும் கலைகளை அடிமைப்படுத்தாமல் கோயில்களுக்கே அர்ப்பணித்து புனிதமாகக் கொண்டாடிப் போற்றினர். 
     கலைஞர்களுக்கு ஊதியம் அரசுக் கருவூலகத்தில் இருந்து கொடுக்கப்படாமல் கோயில் பண்டாரங்களிலிருந்து கொடுக்கப்பட்டது.  என்றும்,  தஞ்சைப் பெரியக்கோயிலில் மட்டும் 400க்கும் மேற்பட்ட ஆடல் அரசிகளை நியமித்து அவர்களுக்கு  நிரந்திர வருவாய், குடியிருப்புகள், நிரந்திரப்பணி, சுதந்திர உரிமைகள் ஆகிய இத்தனையும் அளித்து அந்த ஆடல் அரசிகளின் பெயர்களையும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியம், குடியிருப்பின் பகுதி, கதவிலக்கம் முதலான விவரங்களையும் இக்கோயிற்கல்வெட்டுகளில் பொறிக்கச் செய்தான் இராசராசன்.
     ஆனால் அவனது அரண்மனையில் ஒரு பெண் ஆடியதாக வரலாறே கிடையாது...'' என்று தொடர்ந்து எழுதுகிறார், குடவாயில்பாலசுப்பிரமணியன். இப்படியான முறை, நடைமுறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு இருந்திருக்க வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. இம்மன்னன் காலத்தில் தேவதாசி முறையை நிலஉடமைச்சமூகம் நடைமுறையில் கொண்டு இருந்ததைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டு நிலவுடமைச்சமூகம் இப்படியான பெரும் வளர்ச்சியினை அடைமுடியாது.
     பக்தி இலக்கியக்காரர்களான நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாசுரங்கள் மக்களை தங்கள் வசப்படுத்தும் இசைவடிவை கொண்டு இருந்தன. அவை தமிழின் தூய்மையையும் வளமையையும் நுட்பமான இசைக்கூறுகளை கொண்டு இருந்தன.
     ஏழாம் நூற்றாண்டு தொடங்கி திருநாவுக்கரசரும், ஆளுடையப்பிள்ளை என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தரும், சுந்தரரும் தொடக்கிய பத்திஇயக்கம் தமிழையும் சிவத்தையும் அதிகாரத்திற்கு கொண்டு வர அவர்கள் நடத்திய போரட்டமும் அவர்களோடு துணைநின்று பழையாறை சோழ சிற்றரசு மறைமுகமாக நடத்திய போரும் தான் சோழப்பேரரசு தோன்ற அடிப்படையாக இருந்திருக்கிறது என்பது மிகையில்லை. அவர்களின் உழைப்பும் உருவாக்கத்தையும் கொண்டு ஆட்சி உரிமை பெற்ற சோழ அரசர்களில் பெரும்பாலோரில் ராசராசன் உள்பட அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றிடவில்லை
      இந்த நாயன்மார்களின் பாடல்களை சிவஆலயங்களில் பல்லவர்கள் காலம் தொட்டே பாடப்பட்டு வந்துள்ளன. ராசராசனை வளர்ப்பதில் கவனம் கொண்டு இருந்தப் பெண்மணிகள் கட்டியக் கோயில்கள் அனைத்திலும் அப்படியானப் பாடல்களை பாட, ஓதுவார்களை நியமித்து  வைத்திருந்திருக்கிறார்கள். அவர்களின் தூண்டுதலின் பேரில் தில்லையில் தேவாரமூவர்களின் பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகளை மறைத்து வைத்து அழிந்துக் கொண்டிருந்ததை மீட்டு எடுக்கும் பணியைச் செய்யுமாறு பரிந்துரைக்க இராசராசன் உடன் செவிசாய்த்திருக்கிறான்.
     தில்லை வாழ்தீட்சிதர்கள் இந்த தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகளை யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்திருந்ததற்கு காரணம் அவர்கள் கைகொண்டு இருந்த வேதஆகமத்திற்கு எதிரிடையான போக்குகளை கொண்டு வந்து விடும் என்பது தான். இன்றைக்குக் கூட அவர்களின் போக்குகளை கவனிக்கும் போது அவர்களிடம் இருந்து தேவாரப்பாடல்களை அவ்வளவு எளிதில் ராசராசனால் மீட்டு எடுத்து இருக்க முடியும் என்று நம்புவதற்கில்லை. அவன் படைவலிமையைக் காட்டித்தான் மீட்டு எடுத்திருக்க முடியும்.
     வேறுவழியின்றி அந்த தீட்சிதர்கள் இராசராசனுக்கு பணிந்திருக்கிறார்கள். கதவைத் திறந்து பார்க்கும் போது அந்த ஏட்டோலைகள் கரையானுக்கு இரையாகிக் கிடக்க அதன் மேல் புற்றாகிக்கிடந்த மண்செறிவுகளை நீக்கி, மூலிகைச்சாற்றை குடம் குடமாக ஊற்றி எஞ்சியிருப்பவற்றை எடுத்து நம்பியாண்டான் நம்பியின் மூலம் தொகுத்துத் தந்துள்ளான்.
     இவை மட்டும் மீட்டு எடுக்க முடியாமல் போயிருந்தால் அன்றைக்கு இருந்த நிலஉடமைச்சமூகத்தின் பண்பாட்டு அம்சங்களையும் பக்திஇலக்கியத்தையும், சோழப்பேரரசு அமைய அவர்கள் வழிநடத்திய  வரலாற்றையும், அன்றைக்கு தமிழகம்முழுதும் இருந்த சமூக வரலாற்றையும், ஐவகை நிலபாகுபாடுகளையும் அந்த நிலத்தில் வாழும் மக்களின் வாழ்முறையையும் நாம் பெறமுடியாமல் போயிருக்கும்.
     ராசராசனை வளர்ப்பித்த அப் பெண்மணிகளால் முத்தமிழும் தஞ்சைக் கோயிலில் வளர்க்கப்பட்டன. அவர்கள் விருப்பத்திற்கு எதிராக ராசராசனால்  நடந்திட இயலவில்லை. அவர்கள் விருப்பப்படியே இசைத்தமிழின் வளர்ச்சிக்குத் திருமுறைகளைத் தொகுத்து தினமும்  பெருவுடையார் முன்பு அத்தமிழ்ப் பதிகங்களைப் பாட வல்லோர்களை நியமித்தான். இவ்வகையில் 48 தமிழ் இசை வல்லோர்கள் நியமிக்கப்பட்டுத் தினமும் திருக்கோயிலில் தமிழ் பாடவைத்து இருக்கிறான். இவர்கள் பாடும் போது உடுக்கையும் கொட்டி மத்தளமும் இசைக்க தக்க இசைக்கலைஞர்களை நியமித்துயிருக்கிறான். அவ்விடம் தேவஆகமமுறைகளைச் சுட்டி இசைக்கலைஞர்களை கோயிலுனுள் அனுமதிக்க இடையூறாக இருந்த வேதவைதீகர்களை  ஒடுக்கவும் செய்திருக்கிறார்கள் அப்பெண்மணிகள்..
     பொய்கைநாடு தென்னவன் மூவேந்த வேளாண், சிறந்த சிவபக்தன். சிவஆகமத்தின் மீதும் தமிழ் மீதும் ஆழ்ந்தப்பற்றைக் கொண்டு இருந்தான். கூடவே குந்தவையின் அபிமானியாகவும் இருந்தவன். குந்தவையின் உடன்பிறந்தான் ராசேந்திரனின் நம்பிக்கைக்கு உரியவன். மன்னனின் ஆணைப்படியே நீ காரியம் செய்து வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. 
     இப்பெரிய கோயிலின் உள்ளேயே, ` உலகமாதேவியார் ராசராசன்' ஆகியோரது செப்புபடிவங்களையும் எழுந்தருளு வித்து அவற்றிற்கு அணிகலன்களும் அணிசெய்திருக்கிறான்.  இவன் முயற்சியால், இப்பேராலயத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், நம்பியாரூரார், நங்கை பரவையார், மெய்ப்பொருள்நாயனார், சிறுதொண்ட நாயனார்' போன்ற பக்திஇயக்கத்தவர்களுக்குச் செப்படிமங்கள் எழுந்தருளுவித்து அந்தச் செப்புபடிமங்களுக்கு அணிகலங்களும் அணிவித்திருக்கிறான்.       
     இவனைக்கொண்டே  ராசராசனை சிவநெறிக்கு இட்டுச் சென்றப் பெண்களின் விருப்பத்திற்கு இணங்கி கி.பி. 995 இல் திருச்சோற்றுத் துறைக்கோயிலில் நாள்தோறும் தேவாரப்பதிகம் பாடுவோர்க்கு நிவந்தமாகப் பொன் அளித்துள்ளான்.
     இராசராசனை வளர்ப்பித்தவர்களுக்கு சிவநெறியில் ஆழ்ந்தப் பற்று இருந்ததால் வைணவமத நெறியில் அவர்களுக்கு வெறுப்பேற்றும் நிலையில் தான் அன்றைய போக்குகள் அமைந்திருந்தன. இருந்தாலும் அவர்கள் வைணவத்தை பரப்பிய ஆழ்வார்களின் மனதைக்கவ்விப்பிடிக்கும்  இனியத் தமிழ் திருப்பதிகங்கள் இவர்கள் மனதையும் சுண்டியிழுத்திருக்க வேண்டும். கூடவே வேதியர்களின் ஒடுக்குதலில் இருந்து தமிழ் மீட்கப்பட வேண்டும் என்பதையும் எண்ணியிருக்கிறார்கள். நாம் தமிழ்மக்களுக்காக தமிழால் ஒன்றுபட வேண்டி நேரம் இது என்ற நம்பிக்கையும் அவர்கள் மனதில் உதித்திருக்கலாம்.
     அதனால் தான் திவ்வியபிரபந்தங்களின் பெருமையை உணர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். பெருமாள் கோயில்களில் திருப்பதிகங்கள் பாடவும் ராசராசன் உதவிபுரிந்திருக்கிறான். இராசராசனின் காலத்திய `உக்கல்' கல்வெட்டு ஒன்று, `திருவாய் மொழித்தேவர்' என்று பெருமைப்பட்டு இருப்பதே அதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது.
     பிராமண வைதீகத்தின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் பிற்காலத்தில் ராசராசனே நேரிட்டு பெருவுடையார் கோயிலில்  ஆரியம் பாட மூவரையும், தமிழ்பாட மூவரையும் நியமித்திருக்கிறான். தேவநாகரியைப் பாடியவர்களுக்கு ஒருபடி அதிகமாக ஊதியம் வழங்கவும் ஏற்பாடாகி இருந்திருக்கிறது.  தமிழையும் தேவநாகரியையும் சோழர்குலப் பெண்களால் நேர்கோட்டில் வைத்துப் பார்க்க முடியவில்லை. அதனால் பெருவுடையார் கோயிலை நிர்வகித்த, `தென்னவன் மூவேந்த வேளாண்' மூலம் தமிழ்பாடுபவர் ஒருவரை கூடுதலாக அமர்த்திடவும் தேவநாகரியைப் பாடியவர்களுக்கும் தமிழ்பாடியவர்களுக்கும் ஒத்த ஊதியம் வழங்க செய்திருக்கிறார்கள்.   
     கூடவே,  இந்த ஆலயத்தில் வழிபடுவோர் சோமசூத்ர பிரதட்சணம் என்று சொல்லுகின்ற  நெறியை விடுத்து முழுப்பிரதட்சணம் செய்யும் வசதியையும் உண்டாக்கித் தந்திருக்கிறான்.  சிவஆகம ரீதியாக அமைக்கப்பெற்ற இடைக்கழி வண்ணப்பட ஓவியங்கள் கலைப்பொலிவும் வரலாற்றுச் செய்திகளும் நிரம்பியதாக அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கும் அக்கோயிலில் உள்ள கல்வெட்டே சான்றாகிறது.
     பெருவுடையார் ஆலயத்தில் ஆகம நெறியில் வழிபடுவதற்கு பல்வேறு இசைவாணர்களும், ஆடல் பாடல் வல்ல மகளிரும், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேவாரப்பாடல்களான தெய்வநெறியைப் புகட்டும் நாயன்மார்களின் பாடல்களை `பண்'வகைகளைக் கொண்டு இசை அமைப்புச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தைப் பெறவும் அதை விரைவாக செய்து முடிக்க எண்ணினான். அதில் வல்லவர்களை தேடும்பணியில் ஈடுபட்டு இறுதியில் எருக்கம்புலியூரில்  வாழ்ந்து, இசையிலும் யாழிலிலும் வல்ல பாணர் குடியில் தோன்றிய  நங்கை ஒருத்தி பண்ணியல்பு அறிந்தவள் என்று அறிகிறான்.  அவளை அழைத்து வந்து  ஏழுதிருமுறைகளுக்கும் தனித்தனியாக தமிழ்ப்பண் அமைக்கச் செய்தான்.  அப்பண்ணிசையைக் கொண்டே இசைவாணர்களும் ஆடல் பாடல் வல்லவர்களும் தினம் தினம் தேவாரத்தை இசையோடு பாடியிருக்கிறார்கள், ஆடியிருக்கிறார்கள்.
     இப்படியான பணிகளை சிவமதத்திற்கும் தமிழுக்கு செய்திருக்கும் இராசராசனை வேதியர்கள் தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பலவழிகளை மேற்கொண்டு இருந்திருக்கின்றனர். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அரசவையில் திருமந்திர ஓலைநாயகமாக விளங்கியவர்கள் இருவர்.  `சேனாதிபதி கிருஷ்ணன் இராம மும்முடிச்சோழ பிரமாராயன்' என்ற ஒருவன். `ஈராயிரவன் பல்லவராயன்' ஆகிய, `மும்முடிச்சோழ போகன்' என்பான் மற்றொருவனாவான். இந்த இருவருமே வேதபிராமணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலாமவன், இராசராசனின் படைப்பிரிவுக்கு தளபதியாகவும் இருந்திருக்கிறான். இப்படியான தகவல்களை அடங்கிய கல்வெட்டுகள் ஆவுடையார்கோயிலில் பதிக்கப் பெற்று இருக்கின்றன.
     ராசராசனின் ஆட்சியின் இறுதிகாலத்தில் சமணத்துறவியான அமிர்தசாகர், யாப்பருங்கலம், யாப்பெருங்காரிகை என்ற நூல்களை எழுதினார். இப்புலவர் அமிர்தசாகரை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துச் சிறு குன்ற நாட்டில் வந்து வாழுமாறும், இராசராசன் கேட்டுக் கொண்டதோடு `ஜெயங்கொண்ட சோழன்' என்ற பட்டத்தையும் ஏற்றுக் கொண்டான் என்கிறார் நீலகண்டசாஸ்த்திரியார்.
     யாப்பருங்கலம் என்பது யாப்பிலக்கணத்தைப் பற்றிய விரிவான விளக்கம் கொண்டது. காரிகை என்பது அதன் சுருக்கம். யாப்பருங்கலம் பரப்பிலும், தமிழ்ச் செய்யுள், அடி, சீர்கள் ஆகியவற்றின் பலவகைகளைப் பற்றிய விளக்கத்திலும் விரிவானது. அழிந்து போயிருக்கக் கூடிய அல்லது தெரிந்திராத பல இலக்கிய வகைகளின் சான்றுகளும், எடுத்துக் காட்டுகளும் பேணி பாதுகாக்கப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் குணசாகரின் காரிகை உரைக்கும் பொருந்தும். அவர் அமிர்தசாகரின் சீடர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
     இராசராச சோழன் வரலாற்றைக் கூறும் நூல் ஒன்று அந்நாளில் இருந்தது என்பது திருப்பூந்துருத்தியிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியமுடிகிறது. இந்த நூலின் பெயர், ` ஸ்ரீ இராசராசவிஜயம்' என்பது. அதன் ஆசிரியர்  சர்வணன் நாரணன்பட்டாதித்தன் என்பார் ஆவார். இந்நூல், தேவநாகரியில் எழுதப்பட்டது. அன்றியும் `இராசராசேசுவர நாடகம்' என்ற நாடக நூல் ஒன்றும் இருந்தது என்பது தஞ்சைப் பெரியக்கோயிலில் உள்ள கல்வெட்டால் புலானகிறது'.  இந்நூல் தமிழில் அமைந்தது. கூடவே இராசராசன் தஞ்சையில்  `இராசராசேச்சுரம்' என்னும் பெருங்கோயில் எடுப்பித்த வரலாற்றைக் கொண்டு இருந்திருக்கிறது'  என்கிறார் பண்டாரத்தார்.  இந்தநாடகம் மக்களைச் சென்றடைந்து, ஈர்த்தும் இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. 
     அன்றைக்கு தமிழ், ஆட்சி அதிகாரத்தில் எப்படி எவ்விடத்தில் வைக்கப்பட்டு இருந்ததோ அதிலிருந்து         நூல் பிசகிடாமல் தான் இன்றைக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் தமிழை வைத்திருக்கிறார்கள். என்று நாம் உறுதிபடச் சொல்லிட முடியும்.
      ராஜராஜன் - பெருவுடையார் கோயில் -100 நிறைவு  கருத்தரங்கம் அக்டோபர்,31-2010 தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்க மாநில அமைப்பு நடத்திய ஆய்வரங்கம்.

கதைத் தொகுப்பில் கலைஞர் பெயர் விடப்பட்டுள்ளதா?



(‘முரசொலி’ குத்தலுக்கு தொகுப்பாளர் சோலையின் பதில்)
     02.03.2002 நாளிட்ட முரசொலியின் இரண்டாம் பக்கத்தில் ‘கலைஞரின் சிறுகதை இடம் பெறாதது ஏன்?’ என்ற தலைப்பில் குறிப்பிடத்தக்க பத்திச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது குறித்து...
     ‘தஞ்சை கதைக்களஞ்சியம்’ நூலுக்கு ‘தினத்தந்தி’ எழுதிய விமர்சனத்தினால் ஏற்பட்ட குழப்பம் தான் முரசொலி செய்திக்கு காரணம் என்று பலருக்கும் தெரியாது போய் விடக்கூடும் என்பதாலேயே இந்த விளக்கத்தை எழுதுகிறேன். 
      ‘தஞ்சை சிறுகதைகள்’ ‘தஞ்சை கதைக்களஞ்சியம்’ ஆகிய தொகுதிகளைத் தொகுத்துள்ளேன். இத்தொகுப்புகளுக்குள் அடங்கியுள்ள சிறுகதைகளின் படைப்பாளிகள் அனைவரும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்குள் அடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முரசொலி பத்திச்செய்தியில் தொகுப்பாளர் சோலை சுந்தரபெருமாள் இடதுசாரி – முற்போக்கு எழுத்தாளராக இருக்கிறார், இன்றைய அரசியல் போக்குக்கு ஏற்ப இத்தொகுப்பைச் செய்திருக்கிறார் என்பதே முரசொலியின் குற்றச்சாட்டு. இது ஆதாரமற்றது. இப்படியான செயல்பாட்டை ‘அவசரகுடுக்கை’ என்பார் எம்மண்ணின் மக்கள். இச்சொல்லாடலை மக்கள் வழக்காறு என்பார் ஆய்வாளர்கள்..
     எம்மண்ணின் சிறுகதை படைப்பாளிகளில் சிறுகதை வடிவத்திற்கு அழுத்தமான பங்களிப்பு செய்தவர்கள் - செய்து கொண்டு இருப்பவர்களில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளோடு அப்படைப்பாளிகளைப் பற்றிய குறிப்புரையோடு தொகுப்பாக்கப்பட்டுள்ளது. இப்படியான உள்ளடக்கத்தோடு 33 படைப்பாளிகளைத் தொகுத்து வெளிக்கொண்டு வந்தது தான் ‘தஞ்சை சிறுகதைகள்’ (1999ல் பெங்களூர் காவ்யா வெளியிட்டது).
     இத்தொகுப்பில் கலைஞர் கதை இருக்கிறது.  பக்.175.  இத்தொகுதியின் உள்ளே திராவிட இயக்க எழுத்தாளர்களின் பங்களிப்பை, சில இலக்கியவாதிகளும், விமர்சகர்களும் திட்டமிட்டே புறக்கணித்து விடுகிறார்கள் என்ற வேதனையை கொந்தளிப்புடன் பலவிடங்களில் பதிவு செய்துள்ளேன்.  இலக்கிய விமர்சனக்கூட்டங்களிலும் நேர்காணல்களிலும் சொல்லி வருகிறேன். (தஞ்சை சிறுகதைகள் பக்கம் 174, 294)
     ‘தஞ்சை சிறுகதைகள்’ தொகுப்பில் விடுபட்டுப்போன திராவிட எழுத்தாளர்களோடு மற்ற சிலரையும், இன்றும் எழுதத் தொடங்கியிருப்பவர்கள் வரையிலும் என் வாசக அனுபவத்துடன் ‘தஞ்சை கதைக்களஞ்சியம்’ என்ற இரண்டாம் தொகுதியை வெளிக்கொண்டு வந்துள்ளேன்.  இத்தொகுப்பில் தான் கலைஞர் இடம் பெறவில்லை. 
     விதையாய் கோட்டைக்குள் இருப்பவரை களஞ்சியத்தில் - பத்தாயத்தில் கொண்டு வருவது நியாயம் இல்லை.  அதுபோல எந்த படைப்பாளரையும் கொண்டு வரவில்லை.  இவ்விரண்டு தொகுப்புகளும் கொண்டு இருக்கும் உள்ளடக்கத்தையும்  தொடர்ச்சியையும் தினத்தந்திக்கு மதிப்புரை எழுதியவர் அறியவில்லை.  ஆனால், பதிப்புரை, என்னுடைய முன்னுரை ஆகியவற்றிலும் குறிப்பாக நூலின் பின் அட்டைப்பட பகுதியில் பெரிய எழுத்தில் பளிச்சென்று படுவது போல் அச்சாகியுள்ளன.
     இடதுசாரிகள், கலைஞர் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றகழகத்தை விடுத்து கூட்டணி அமைத்துக் கொண்டதால் தான் தொகுப்பில் தொகுப்பாளராகிய நான் கலைஞரை புறந்தள்ளியதாக முரசொலி கருதி செய்தி வெளியிட்டு இருப்பது வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதை நடுநிலைமையோடு தொகுப்புகளை படிப்போர்  உணர்வார்கள்.
     நான் இந்த இரண்டு தொகுதிகளையும் தொகுக்கக் காரணம் - என்னுடைய உள்ளுணர்வை - இத்தொகுதிகளில் எழுதியுள்ள நீண்ட முன்னுரைகளை படிப்பவர்களுக்கும் படித்தவர்களுக்கும் பிடிபட்டுவிடும். 
     இத்தொகுதிகளை வெளிக்கொண்டு வர தனியாளாய் நின்று எவ்வளவு பொருளை இழந்திருப்பேன்? எவ்வளவு காலத்தை செலவிட்டிருப்பேன் என்பதையும் இத்தொகுதிகள் அடையாளப்படுத்தும்.
     ஒரே வரியில் நான் சொல்ல வேண்டுமானால் எல்லாவற்றையும் மீறி இலக்கியவாதியாகிய ‘கலைஞரையே’ நான் மிக மிக... அதிகமாய் நேசிக்கிறேன்.  நான் அறிந்தவரை இடதுசாரிகளும் கலைஞர் என்ற இலக்கியவாதி - படைப்பாளி மீது நல்ல நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றே அறிகிறேன்.
     ஒரு பின்னோக்கிய பார்வையில்...
     ‘தஞ்சை சிறுகதைகள்’ வெளிவந்ததும் முதல்வராக கலைஞர் இருந்தபோது நேரில் நூலை தருவதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.  பதிப்பாளர் ‘காவ்யா’ சண்முகசுந்தரம் அவர்கள் கலைஞரிடம் கொடுத்துள்ளதாகச் சொன்னார். 
     சமயம் வாய்க்கும் போது நானே நேரில் தர வேண்டும் என்று இருந்தபோது தான்... கீழவெண்மணி மக்களின் வர்க்கப்போராட்ட நாவலான ‘செந்நெல்’ நூலினை தமிழகஅரசு பரிசுக்கு உரியதாக தேர்வு செய்திருந்தது. அப்பரிசை திருவள்ளுவர் தின விழாவில் பேராசிரியர் அவர்கள் என்னிடம் வழங்கினார்கள். அப்போது அருகில் அமர்ந்திருந்த முதல்வர் கலைஞர் அவர்களிடம் அத்தொகுப்பை அளித்து வந்தேன்.
     ‘கலைஞர் - ஒரு சரித்திர நாயகனின் பயணம்’ - இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் எழுதிய கட்டுரையை ஜூன் 2010 கணையாழி’யில் வெளியிட்டிருந்தார்கள். 
     இந்தக் கட்டுரையின் மையப்பரப்பில் தஞ்சை சிறுகதைகள் நூலின் அட்டைப்படத்தை அச்சிட்டிருந்தார்கள்.  அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து அதே வெங்கட்சாமி நாதனால் தஞ்சை சிறுகதைகள் நூலுக்கு எழுதிய விமர்சனமும் வெளிவந்தது.  அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். 
     அதே காலத்தில் தினமணி, தீக்கதிர், ஆங்கில ஏடான இந்து, இந்தியா டுடே ஆகிய இதழ்கள் இத்தொகுதிக்கு விமர்சனங்கள் எழுதியிருந்தன. 
     கலைஞரின் கதையைச் சிறப்பாக குறிப்பிட்டும் இருந்தார்கள்.  இப்படியான தகவல்களையும் கலைஞர் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்ற விருப்பத்தோட எழுதியுள்ளேன்.
‘முரசொலி’ கடிதம் - ‘தீக்கதிர்’  - 24.03.2002)